தற்பெருமை கொள்ளாதே

குருக்ஷேத்திர யுத்தத்தில் ‘ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு’ என்று கண்ணன் அர்ஜுனனிடம் கூறினான். அர்ஜுனன் ‘அப்படியா!’ என்றான். ஏன் இப்படி என்று கேட்டான்? எங்கே கேட்டான்? குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர்.
அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது. சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை. ‘கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!” என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ‘அப்படியா!” என்றானாம். சொன்னதோடு நின்றானா! ‘அர்ஜுனா! எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி! இதோ! உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன்! அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை.
இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,” என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, ‘மாருதி! வா போகலாம்,” என்றான். ஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான்.”என்னப்பா இது!
இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ! கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா!” என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான். அவனிடம் கண்ணன்,”அர்ஜுனா! ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு. நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, 150 கல் தொலைவில் விழுந்த நீ பலவானா! யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா…யோசி,” என்றார். அர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்.

-Prasannapugazh

2 thoughts on “தற்பெருமை கொள்ளாதே

Leave a comment