பூங்காற்று புதிரானது

பூங்காற்று புதிரானது

பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அந்த பூங்காற்று மட்டும் எந்த வித சலனங்களுக்கும் ஆட்படாமல் பூம்பாறையின் பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு சந்தியா கால வேளையில் மந்தகாசமாய் அந்த பூங்கிராமத்தை பார்த்து கொண்டு இருந்தது.

எத்தனை கோடி இன்பமும் துன்பமும் சூழ்ந்தாலும் பூக்களின் வாசத்தை மட்டும் அள்ளி எடுத்து வீசிடும் இந்த பூங்காற்று என்றும் புதிரானது தான். காடு மலைதனில் தவழ்ந்து வரும் பூங்காற்றுக்கு தான் மானுட நெஞ்சத்தின் வலிகள் புரிந்திடுமா என்ன?. ஊசி இலை காடுகளின் ஏகாந்த வாசத்தை நாசிகளில் துளைத்துக் கொண்டு செப்பனிட்டு அமர்ந்து இருந்தது அந்த பூங்காற்று. அன்று இரவு ஊரெல்லாம் இதே பேச்சு தான். பூமி சுழல மறுத்து தர்ணாவில் இறங்கியதை போல காட்சியளித்தது அந்த பச்சை மலை தொடர். தொழுவத்தில் இயேசு மட்டும் தன்னந்தனியாக தன் மழலை ஓசைகளை போதித்து கொண்டிருந்தார். கேட்க தான் ஆளில்லை. கைக்கு அடங்காத சாரய பாட்டில்களையும் ஒரு தூக்கு சட்டியையும் எடுத்துக் கொண்டு நெடுத் தெரு வழியே போவகவாய் ரோட்டை பிடித்து மேடறியவன் நடையில் வேகத்தை கூட்டினான். வழியெல்லாம் அந்த பேச்சு அவனை பின் தொடர்ந்தது.

‘செயலலிதாவ தள்ளிவிட்டாய்களலாம்லடீ’

‘அடுத்து யார் வாராகலாம்’

‘எம்சிஆருக்கு இருந்த திறம திரானி யாருக்கும் வராதுப்பே’

‘ஆத்தே கட்சிய உடச்சுப்புட்டாய்ங்க’

‘அடுத்து சானகி அம்மா தான் வரப்போகுது’

வற்றி கிடந்த சுரப்பிகளின் பாதையில் எந்த துளி விழுந்திடுமோ என்று வீங்கி கிடந்த கண்களோடு அமர்ந்திருந்தவளை தரதரவென கைகளை பிடித்து கண்மூடித்தனமாக தள்ளி விட்டது ஒரு கூட்டம். பாலைவன ஊற்றில் துளிர்த்த நீரைப் போல பொல பொலவென கண்ணீர்க் கண்களுடன் ஒவ்வொரு ஆணையும் அவள் பார்த்த பார்வை அன்று பாரதியின் சபதத்தை பறைசாற்றி இருந்தது. அது பிற்காலத்தில் நிகழ்ந்தது சரித்திரத்தின் பேரதிர்ஷ்டம்.

‘ஊரே அடங்கி போய் கிடக்கு’

‘செயலலிதா வந்தா பொம்பளயாளுக்கு எதனா நல்லது செய்யும்’

‘எம்.சி.ஆரு இல்லாதத நினச்சு பாக்கவே முடியலயேடீ’

‘கடை கன்னியலாம் அடிச்சு உடைக்கிறாய்ங்கலாம்லடீ’

இவையெல்லாம் அவன் காதுகளில் விழுந்தது; அதை கேட்டுக் கொண்டே பொடி நடையாக மன்னவனூர் மேட்டை அடைந்தான் மூக்குறுஞ்சி. ஆம்! அவன் பெயர் மூக்குறுஞ்சி முக்கு உறிய தெரிந்த காலத்தில் இருந்து அவன் பெயர் அது தான். அவன் பாட்டன் முப்பாட்டன் பெயரை எல்லாம் தெரிந்து கொண்டு அவனுக்கு என்ன சொத்தையா எழுதி வைக்க போகிறோம்.

ரோட்டின் ஓர வளைவுகளிலே பதுசாக வேகமெடுத்து நளினத்துடன் நடந்தவன்; மன்னவனூர் ரோட்டை முட்டும் வளைவில் இருந்த மலைச் சரிவுகளிலுள்ள மேட்டின் இடுக்குகளில் புகுந்தான். அங்கு தவளைகளும் சாரைகளும் அந்தாச்சரி ஆடிக் கொண்டிருந்தன. புன்னை மர கிளையின் கீழ் தீ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. பூங்காற்றின் அசைவில் கொஞ்சம் மசமசவென்று எரிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி மூன்று ஆசாமிகள் குளிர் காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.

ஆகாயம் மெள்ள நகர்ந்து வெண்ணிலவை அனைத்து கொண்டது. எந்த வித சஞ்சலமும் இல்லாமல் யாருக்கும் எவருக்கும் எந்த தீங்கும் செய்யாத அந்த ஆகாயம் வானில் நீக்கமற வியாபித்து இருப்பது போல மனித மனங்களும் இருந்துவிட்டால் நன்றாய் தான் இருக்கும். தோற்றமும் இல்லாத அழிவும் இல்லாத அந்த ஆகாயத்தை போல வாழத் தான் எல்லோருக்கும் ஆசை. துரதிர்ஷ்டவசமாக யாருக்கும் அது வாய்ப்பதில்லை அப்படி வாய்த்தாலும் அவர்கள் நிலைப்பதில்லை.

தீக்கு வாகாக விறகை எரித்து கொண்டிருப்பவன் தான் கருமுண்டம். பேருக்கு ஏத்தாற்போல நல்ல கருத்த முண்டம். முகமும் தான். அவனுக்கு சுள்ளி பொறுக்கிகொடுப்பவன் தான் கட்டியங்காரன் அய்யாவு. இருவரும் பால்ய சிநேகிதர்கள். தொழில் முறை கூத்துக் கலைஞர்கள். சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவிலில் அரங்கேற்றம் நடத்தி பத்து வருடங்களாக கூத்து கட்டி பிழைப்பு நடத்துகிறார்கள். கருமுண்டம் கூத்து பாட அதற்கு அய்யாவு கொட்டடிக்க என இந்த இரண்டு பேரு சேர்ந்து மட்டுமே கூத்துக்கட்டி இராமனுக்கும் முருகனுக்கும் சீதைக்கும் வள்ளிக்கும் அழகு சேர்ப்பார்கள். ஆனால் காலப்போக்கில் மனிதர்களின் கேளிக்கை விஸ்தாரமானதில் அவர்கள் மட்டும் சேர்ந்து கூத்து கட்டி மக்களை திருப்திப்படுத்த முடிவதில்லை. சாமன்ய மனிதர்களை அவ்வளவு சீக்கிரம் திருப்திபடுத்திவிட முடியுமா என்ன?. அதுபோக கருமுண்டம் வேசங்கட்ட போவதில்லை என சொல்லி சபதம் செய்த கதையையே இன்னும் ஊரு முழுக்க பேசியாகவில்லை. பற்றாக்குறைக்கு டூரிங் டாக்கீஸ்கள் தியேட்டர்களாக உருமாறிக் கொண்டிருந்தது. நாடக கலைஞர்களின் அன்றாட காட்சியே ஆட்டம் காண ஆரம்பித்தது. தெருக்கூத்தை பற்றிச் சொல்லியா தெரிய வேண்டும். மன இறுக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள தாஸ்தோவ்ஸ்கியின் கதையை படித்து ஆறுதலடைய கூட தெரியாத வாஞ்சையான வெள்ளந்தி கூட்டம்.

“டேய் கருமுண்டம்! நாளைக்கு தேனி கூத்தாம்ல சொல்லவே இல்ல” எரிகின்ற சுள்ளியில் இன்னும் இரண்டை எடுத்து போட்டான் பரலோகம். பரலோகம் ஒயிலாட்டத்தில் வித்தைக்காரன் அவன் போடும் ஒயிலுக்கு பல கண்ணிகைகள் அவன் மீது கிரக்கம் கொண்டு திரிந்தார்கள். அது அவன் ஆட்டத்துக்காகவா என்று தான் இன்று வரை புரியாத புதிராக அந்த பூம்பாறையை சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.

“ஆமாபா! அதுக்கு தான் உன்னய இங்க வரச்சொன்னேன்” என்றான் கருமுண்டம்.

பஞ்சபூதங்களிலே நெருப்புக்கு தான் எத்தனை சிறப்புகள். தன்னுடன் சேரும் அத்தனையும் தனதாக்கிக் கொள்ளும். எந்த நிலையிலும் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளாத ஓர் புனிதம். அந்த தீயை மெள்ள அசைத்தபடி கிழக்கு நோக்கி பயணித்த பூங்காற்று வேலப்பன் கோயில் தெருவை அடைந்தது. பூங்காற்றில் கைக்குட்டைகள் அங்குமிங்கும் பறந்தன. மாடப்புறாக்கள் சிறகுகளை அடித்து இதமான காற்றில் தன் ஜோடிகளுடன் இணை சேர எத்தனித்து கொண்டிருந்தன.

“நாசமத்து போனவ அழகு பெத்த பிள்ளய விட்டுட்டு போய்டாளே எடுப்பட்ட சிறுக்கி” பஞ்சவர்ணம் பேசியதை அந்த பூங்காற்று மெள்ள பெத்தராசு காதில் கொண்டு வந்து சேர்த்தது.

“மா என்ன பேச்சு பேசுற பிள்ள முன்னாடி” தன் மகளின் நெற்றியை வருடியபடி சொன்னான் பெத்தராசு. நெருப்பின் அணைப்பு அவள் நெற்றியில் இருந்தாலும் அந்த சூடு அவன் உள்ளத்தை உலுக்கி எடுத்தது.

“இல்ல யா மனசு பொறுக்க முடியாம தான்…

பாரு புள்ள அம்மா அம்மானு ராத்திரி ஆனா ஆத்தால நெனச்சு தூக்கத்துல அனத்துது…”

“ஒன்னுல்ல…

நீ அமைதியா படு நான் மேட்டுத் தெரு வரைக்கும் போய்ட்டு வரேன்” சொல்லிக் கொண்டே வெண்ணிலாவை பார்த்தான் பெத்தராசு. வானில் ஒன்று இருந்தது உடைந்த மரக்கட்டிலில் ஒன்று கிடந்தது.

போகிறவனை அழைத்து இன்னும் இரண்டு சொற்களை எடுத்து போட்டாள்.

“ஏன்யா கஞ்சி காய்ச்சக் கூட வீட்ல எதும் இல்லைய்யா” மறுமொழி பேச எதுவும் வார்த்தை இல்லை தலையசக்க கூட கழுத்தோடு ஒற்றிக் கொண்ட பிண்டத்துக்கு வக்கில்லை.

மூச்சு வாங்க நடந்து வந்தும் பெத்தராசு முகத்தில் எந்த களைப்பும் இல்லை. வரவேற்பு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. “வாடா” என்ற சொல் மட்டும் கருமுண்டம் வாயில் இருந்து வந்தது. அது கூட மற்றவர்கள் வாயில் இருந்து வரவில்லை அதை அவன் கண்டு கொள்ளவும் இல்லை. அழையா விருந்தாளிக்கு என்ன உபசரிப்பு வேண்டி கிடக்கிறது என்று நினைத்தானோ என்னவோ.

“என்னடா இந்தப்பக்கம்…

ஆன்…

இங்கலாம் வரமாட்டியே நீ!” சாராய பாட்டிலை திறந்தபடி கேட்டான் கருமுண்டம்.

“அண்ணே..” பெத்தராசு இழுவைக்கு ‘உம்’ கொட்டினான் கருமுண்டம் .

“அண்ணே ஒரு நூரூவா கடனா தான்னே..

அடுத்த மாசம் திருப்பி தந்துரேன்” தயங்கி தயங்கி கேட்டான் பெத்தராசு.

“நூறு ரூவாயா…

எதுக்குடா ” கண்ணாடி டம்ளரில் நிரம்பி கொண்டிருந்தது. அதை கவனித்து விட்டு கேட்டான் கருமுண்டம்.

அய்யாவு அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த உரையாடலுக்குள் எந்த வித இடயூறையும் விளைவிக்காமல் அமைதி காத்தான் பரலோகம். அவனிடம் ஜாடை பேசியபடி இருந்தான் மூக்குறுஞ்சி.

பெத்தராசுவுக்கு கைக்கொடுக்க மூக்குறுஞ்சி ஒரு வார்த்தையை அள்ளி போட்டான்.

“பிள்ளைக்கு உடம்பு சரியில்லை அண்ணே..” என்றான் மூக்குறுஞ்சி.

“கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டி போவேண்டி தான” என்றான் கருமுண்டம்.

“உடம்புக்கு ஒன்னு இல்லணே…

வீட்ல கஞ்சி காச்சக் கூட எதுவும் இல்ல அண்ணே” கெஞ்சிக் கொண்டே கேட்டான் பெத்தராசு.

ஒருக்கட்டத்தில் அமைதி காத்தவன் பொறுமை இழந்தான் அந்த மதிகெட்டான் சோலையில்.

“ஆஹா செவலை பட்டைனா செவல பட்ட தான்

என்னமா பதமா காய்ச்சிருக்கான் பய வெல்லம், தண்ணீ, பழம், வேலாம் பட்டைனு அளவ கனகச்சிதமா போட்டுருகான்

ச்ச கொன்னுட்டான் மனுசன்” என்று பரலோகம் சிலாகிப்பதை கண்டு மூக்குறுஞ்சி வாயெடுத்தான்.

“ஏன்னே பேசாம ஆட்டத்த விட்டுட்டு நம்மலும்…” மூக்குறுஞ்சி முடிக்கும் முன்பே பரலோகம் சொன்னான்.

“டேய் இதென்ன சாமனியமானா வேலயா

கலவைக்கும், ஊறலுக்கும் மட்டுமே கணக்கு தெரிய மூனு மாசம் ஆவும்

அப்பறம் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பொறுமையா காத்துக் கிடக்கனும்” என்று பரலோகம் எதோ கம்பசூத்திரத்தை கற்றவனைப் போல விவரித்ததைக் கண்டு கருமுண்டம் சொன்னான்.

“அதுவும் வாஸ்தவம் தான்”

அந்த வாஸ்தவத்தையும் மீறி தழுதழுத்த குரலில் பெத்தராசு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

“அண்ணே…”

“டேய்… நீ இன்னும் போலியா”

“அண்ணே கொஞ்சம் தயவு பண்ணுணே” எனக் கரகரத்த குரலில் கேட்டான்.

“ராசு!

புரியுதுடா!

ஆனா நானே இப்ப காசில்லாம தானடா இருக்கேன்” கருமுன்டம் ஒரே மூச்சில் குடித்து விட்டு சொன்னான். எந்தவித சங்கடமும் இல்லாமல் கருமுண்டம் சொல்லிவிட்டான். வலியையும் கொடுமையையும் அனுபவிப்பவனுக்கு தானே தெரியும்.

“அண்ணே ஒரு வாரமா தொழில் எதுவும் நடகல…

கையில சல்லி பிசா இல்லனே

எதனா பார்த்து சொல்லுணே” என்றான் பெத்தராசு பரிதாபமாக.

“இல்லடா நானே கூத்து கட்ட ஆளில்லாம இருக்கேன்டா…

சமயம் பார்த்து மருதுவும் வரமாட்டேனுட்டான்

மணிவண்ணன் வேற என்ன பண்ண காத்திருக்கானோ…

நானே என்ன பன்றது தெரியாம நொம்பலத்துல இருக்கேன்

நாளிக்கு கூத்து கட்டுனா தான்டா காசே கண்ணுல பாக்க முடியும்” என்று தீர்க்கமாகவே சொன்னான் கருமுண்டம்.

“அண்ணே அப்ப நான் நாளைக்கு ஒரு ஷோவ போட்டுக்க வா” எனக் கெஞ்சிக் கேட்டான் பெத்தராசு. கெஞ்சுவதை தவிர மற்றொன்றையும் பெத்தராசு கற்று வைத்திருந்தான். அது அவன் அப்பன் பாட்டனிடம் கற்று கொண்ட வித்தை மாயவித்தை. ஆங்கிலேயர் காலத்தில் அவன் பூட்டன் ஆர்வத்தில் கற்றது இன்று அவனுக்கு குலத் தொழிலாகிப் போனது. கைக்குட்டையின் உள்ளே இரண்டு பூவையும் ஒரு புறாவையும் அடக்க தெரிந்த ஒரு நலிந்த மாயக்காரன்.

“எது அந்த புறாவையும் நாலு டவலையும் வச்சா

ஏப்பே கூத்துக்கு தான்டா காசு தருவாய்ங்க

அப்புறம் நீ ஓசி காட்சி தான்டா

காசுலா கிடைக்காது

சொல்லிட்டேன்” கருமுண்டம் கண்ணாடி டம்ளரை வாயில் வைத்து கொண்டு சொன்னான்.

சட்டென மூக்குறுஞ்சி யாரையோ பார்த்து கொண்டே பதறிப் போய் பதுங்க முற்பட்டான். “என்னடா என்ன ஆச்சு” என்று குழப்பத்துடன் கேட்டான் அய்யாவு.

“இல்லணே தண்டல்காரனு நினச்சு பயந்துட்டேன்” வெளிறிய முகத்தில் பீதியடைய சொன்னான் மூக்குறுஞ்சி.

“ஏலேய் அவன் நம்ம வெட்டியான் சுருளிடா…” சிரித்துக் கொண்டே சொன்னான் அய்யாவு.

“அவன் எதுக்கு சாமத்துல இந்த பக்கம் சுத்திக்கிட்டு இருக்கான்” என மூக்குறுஞ்சி சத்தமாக கேட்டான்.

“அவனுக்கும் தொழில் படுத்துறுச்சுல அதான் சாமக்கோடாங்கி வேசம் கட்டி கிழடு கட்டைகளுக்கு எளவ கூட்டலாமானு பாக்குறான்” என்றான் அய்யாவு.

“ஊருல சாவு இல்லன அவன் பொழப்பும் நம்ம பொழப்பு மாறி தான்” என்று கொஞ்சம் ஆதங்கபட்டான் கருமுண்டம். அதோடு கொஞ்சம் வசவுகளும் நீண்டது அதற்கு கொஞ்சம் கத்திரி போடவும் இங்கு வேண்டி உள்ளது.

“இந்த சர்க்காரும் கடவுளும் ஒன்னு இரண்டு பேரும் நம்மள வாழ விடமாட்டாய்ங்க…

இங்காரு ஒரு காலத்துல கூத்து கட்ட போறம்னாலே

ஒரு மண்டலம் கவுச்சி சரக்குனு எதுவும் தொடமாட்டேன் அவ்வளவு சுத்தபத்தமா இருப்பேன்

இன்னைக்கு அதலாம் விட்டு போச்சு

வயித்த கழுவுனா போதும் போயிட்டு கிடக்கு” கருமுண்டத்தின் புலம்பலில் இருந்து அவனுக்கு போதை ஏறி போனதை உணர்ந்தான் பெத்தராசு.

“அண்ணே என் விசயத்துக்கு வாணே”

“உன் விசயத்துக்கு எங்க வர

அதான் சொன்னேன்ல” என்று மூக்குறுஞ்சி கொண்டு வந்த தூக்கு சட்டியை திறந்து அதில் இருந்த ஒரு துண்டு உப்புகண்டத்தை எடுத்து கடித்தான் கருமுண்டம்.

“இருக்கட்டும் ணே வரவுக அஞ்சு பத்து கொடுத்தா கூட உபகாரமா இருக்கும்ல..

காசில்லாம கஸ்டமா இருகுணே” பெத்தராசு குரலில் அதற்கு மேல் இறக்கம் இல்லை.

“ம்ம்ம் சரி இவளோ தூரம் நீயே இறங்கி வந்துட்ட அப்பறம் நான் என்னத்த சொல்றது” என்று கடைசி மடக்கை குடித்து விட்டு வைத்தான் அதிரும்படி.

அதை கேட்ட மாத்திரத்தில் “காலைல அஞ்சு மணிக்கு கிளம்பனும் வெரசா வந்துரு” என்றான் அய்யாவு.

“டேய் பார்த்து டா ஊரே அடங்கி போய் கிடக்கு…

எதும் சலம்பலாகிறாமா…” என கருமுண்டம் கூற ‘ஒன்றும் ஆகாது’ என்ற ஆறுதல் மொழியை தவிர வேறு எதை அய்யாவுவால் கூறிவிட முடியும்.

“சரிணே” என்று சொல்லி எழ முற்பட்டவனை ஒரு சொல் வந்து அவன் மார்பில் சொருகியது. சக்கரத்தை பிடித்து மல்லுக்கட்டும் கர்ணன் மீது எய்த அம்பை போல. அது வேறு எங்கிருந்தும் விழவில்லை பர லோகத்தில் இருந்து விழுந்தது.

“டேய் இவன் பொண்டாட்டி ஓடி போனாலும் நல்ல குத்து கல்லு மாரி தான்டா இருக்கான்…

நானா இருந்துருந்தேனா ஒக்காளி நாண்ட்டுட்டு செத்துருப்பேன் இல்லன அந்த கண்டார ஓலிய தேடி கண்டு புடிச்சு வெட்டிருப்பேன்”

முழுதாக பரலோகத்திற்கு போதை ஏறி போனதை உணர்ந்த பெத்தராசு எதுவும் பேசாமல் நகர்ந்தான். அதுமட்டுமல்லாமல் இந்த வார்த்தையை கேட்பது அவனுக்கு புதிதல்ல. இரண்டு வருடங்களாக எத்தனையோ முறை கேட்டு சலித்து போன விஷயத்தை புளித்து போன மனது மரத்து போன செவியின் வழியே கேட்க மறுத்திருக்கலாம்.

“மூஞ்சில மையிரு வச்சவனெல்லாம் ஆம்பளயா ஆயிற முடியுமா” மறுபடியும் அம்பை சொருகினான் பரலோகம். இந்த முறை கருமுண்டம் பரலோகத்தின் போதை ஒயிலை கொஞ்சம் அடக்கி வைத்தான். குடி முழுவதும் ஆட்கொண்ட பிறகு குடியை கெடுக்காமல் விடாதல்லவா!. போதை உச்சிக்கு போனது நாக்குகளின் நரம்பு கொஞ்சம் வலுவிழந்து போனது. அப்படி இருந்திருந்தால் மட்டுமே அப்படி ஒரு வார்த்தை பரலோகம் வாயில் இருந்து வந்திருக்கும்.

“இன்னும் பத்து வருசம் தான் அடுத்து மவளயையும் கூட்டி கொடுப்பான் மானங் கெட்டபயன்” என சட்டென சொல்லை உதிர்த்துவிட்டான் பரலோகம்.

பெத்தராசுவின் பொறுமை எல்லையைத் தாண்டிய மறுகணம் பரலோகத்தின் சட்டையில் இருந்தது அவன் கைகள். இருவரும் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். கருமுண்டமும் அய்யாவுவும் எவ்வளவோ தங்கள் பலம் கொண்டு தடுத்தார்கள். மூக்குறுஞ்சியும் அந்த பணியில் இனைந்தான். ஆனால் மது தன் வேலையை காட்ட; அத்தனை பெரிய வெற்றியை அவர்களால் ஈட்ட முடியவில்லை. போதையில் நிதானத்தை இழந்த பரலோகத்தால் பெத்தராசுவின் கைப்பேச்சுக்கு பதில் மொழி கூறமுடியவில்லை. ஆனால் பரலோகம் கேட்ட கேள்விகளுக்கு பெத்தராசு தன் கை மொழி போதும் மட்டும் பதில் கூறி விட்டான். சிலசமயங்களில் சில கேள்விகளுக்கு கை மொழி தான் சிறந்த பதிலாக இருக்கக்கூடும்.

பூங்காற்றில் திளைத்திருந்த மண்ணில் உருண்டு புரண்ட பெத்தராசு ஒருவழியாக தன் பேச்சை முடித்துக் கொண்டான். சட்டையெல்லாம் கிழிந்து, தலை முடி கலைந்து, உதட்டில் இரத்தம் வழிய எழுந்தான். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர். காயம் கண்டு வலித்த கண்ணீர் வலி தீரும் போது அடங்கிவிடும் ஆனால் இது மனம் வலித்த கண்ணீர் அது வடுவாக மாறிய பின்னும் கண்ணீரையே தான் சுரக்கும்.

கண்ணீர் கரை கண்டது மண்ணுக்குள் புதைக்கொண்டது. பூங்காற்று அந்த கண்ணீர் மண் துகள்களை அவன் மேல் பரவி சென்றது. எப்போதோ தனக்குள் கேட்கப்பட்ட கேள்விகளை மீண்டும் தட்டி எழுப்பி சென்றது. ஆனால் விடைமட்டும் புதிராய் தான் உள்ளது. அந்த கேள்விகள் மறுபடியும் அவனை சூழ்ந்து கொண்டது. விடைகளை கேட்டு அவனை நச்சரித்தது. கேள்விகள் மட்டும் அவன் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. “எதுக்கு என்ன பார்த்தா, காதலிச்சா, முந்தி விரிச்சா, பிள்ளய பெத்தா, விட்டுட்டு போனா” இந்த கேள்விகளுக்கு இரண்டு பேருக்கு மட்டும் தான் பதில் தெரியும். ஒன்று அவள் மற்றொன்று அந்த பூங்காற்று.

கண்ணீர் வற்றியது ஆனால் உரையாடல் தந்த தருணங்கள் வற்றவில்லை. அவளை முதன் முதலில் பார்த்த அந்த தருணம் அவன் இதய கூட்டை விட்டு இன்னும் அகலவில்லை.

“என்னவாம் என்ன பார்த்துக்கிட்டே இருக்குறவ” முதன்முதலாக கூக்கால் திருவிழாவில் செவ்வரளியை பார்த்த போது பெத்தராசு இப்படி தான் கேட்டான்.

“ஆன் கண் இரண்டும் என் வுட்டு”

“என்னய கலியாணம் கட்டிகிறியா” பெத்தராசு கேட்டதற்கு இப்படி தான் பதில் சொன்னாள் செவ்வரளி.

“உன்ன கண்ணாலம் கட்டிக்கிட்டா என்ன தருவியாம்”

“சொத்தெல்லாம் எதுவும் இல்ல

என் உசுரவேன வச்சுக்க”

“உன் உசுரு எம்புட்டு பெரும்” அதை கேட்டது மட்டுமல்லாமல் அதை உருவி எடுத்து கொண்டும் சென்றுவிட்டாள் அந்த பாதகத்தி. மானம் தான் உயிராக அவன் உடம்பில் ஒட்டி கொண்டு இருந்தது அதுவும் இப்போது காற்றோடு கலந்துவிட்டது அந்த பூங்காற்றோடு.

கல்யாணம் ஆகி மூன்று வருடங்களாகியும் இந்த கேள்விகளை கேட்காவிட்டால் அவள் நல்ல ஒரு இல்லாள் ஆக இருந்திருக்க மாட்டாள். அதை தான் செவ்வரளியும் செய்தாள்.

“ஏயா இந்த வித்த காட்ற வேலைய விட்டுபுட்டு ஒரு நல்ல உத்தியோகத்த தேடுயா…

பிள்ள குட்டி ஆகி போச்சு…

துபாய் கிபாய்னு எங்கயாவது போய் காசு சேர்க்க பாருயா”

அதை கேட்டு ஒரு நல்ல குடும்ப தலைவனாக அவன் பேசியிருக்க வேண்டும். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்போதும் நேர்க்கோட்டில் பயனிப்பதில்லை அல்லவா!. காலம் தன் விளையாட்டை காட்டியது.

“என்ன!!

படுத்ததுக்கு வில பேசுறியா”

பிரிவுகளுக்கு எப்போதும் பெரிய காரணங்கள் தேவையில்லை. இராமன் சீதாபிராட்டியை பிரிய வால்மிகிக்கு ஒற்றை வார்த்தைப் போதுமானதாக இருந்தது. ஒத்தல்லோ டெசுடமெனாவிடம் இருந்து பிரிய ஷேக்ஸ்பியருக்கு ஒரு கைக்குட்டை போதுமானதாக இருந்தது. இவர்களை பிரிக்க ஒற்றை மௌனம் போதுமானதாக இருக்காது?.

ஐந்திணை ஐம்பதின் பொறையனாரின் மானைப் போல வாழும் கணவன் மனைவியை இப்போது பார்ப்பது மிகவும் அரிது. மாதவியின் மேல் பித்து கொண்டு அலைந்த கோவலனுக்காக எதையும் எரிக்க இந்த காலத்து கண்ணகிகள் துணிவதில்லை. ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லி வாதி பிரதிவாதியாகி வாய்தா வாங்குவதைத் தான் இன்றைய சமூகம் வாடிக்கையாக்கி கொண்டுள்ளது.

மனைமாட்சி இல்லா மனைவியை கட்டி விட்டு வாழ்க்கையில் எத்துனை வெற்றிகளை பெற்றாலும் அவன் தோற்றவன் தான் என்று வள்ளுவனே வரையறுத்துவிட்டான். மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என பொட்டில் அறைந்தார் போல் ஏழு வார்த்தைகளை சொல்லிவைத்தவன்; கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என இரண்டு வரியில் சொல்லாமலா போவான். அது என்னவோ மனுதர்மம் பெண்களுக்கு மட்டும் தான் என எவனோ காற்று வாக்கில் சொல்லி விட்டு போய்விட்டான்.

மாற்றான் மனைவியின் விருப்பமில்லாமல் தொட மாட்டேன் என்ற இராவணனை இன்று வரை நாம் மன்னிக்க தயங்குகிறோம் ஆனால் மாற்றான் மனைவியை விருப்பமில்லாமல் புணர்ந்த இந்திரனை பூஜித்து கொண்டாடுகிறோம் .தேவனாக வாழ்வதும் அசுரனாக வாழ்வதும் குணத்தால் இல்லை என்பதை இதை விட பட்ட பரிவர்த்தணமாக காட்ட முடியாது. அவன் தேவனோ அசுரனோ இல்லை தேவசுரனோ அவனவன் கர்மாக்கள் அவனவனை ஆட்டி வைக்கிறது. அதேபோல அவள் பதிவிரதையோ அல்லது பரத்தையோ அவள் கர்மா அவளை எங்கோ கொண்டு போய் தள்ளி விட்டது.

சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினியை போல அந்த பூங்காற்றுக்கு கட்டளையிட்டு சென்றாளோ என்னவோ அவன் வாழ்வில் மட்டும் அந்த பூங்காற்று வீச மறுத்துவிட்டது.

ஏகபத்தினி விரதன் எனப்படும் இராமனின் மனைவி சீதையும் பஞ்சகண்ணிகை தான் அவளை கவர்ந்து சென்ற மாற்றான் இராவணனின் மனைவியும் பஞ்சகண்ணிகை தான். ஐராவதனிடம் கலங்கமுற்ற நளாயினியும் பஞ்சகண்ணிகை தான். ஐவரை மனந்த பாஞ்சாலியும் பஞ்சகண்ணிகை தான் இவளையும் அவர்களோடு ஆறாக சேர்க்கலாம் தான் ஆனால் சேர்த்தால் மட்டும் தான் அவள் ஆறங்கண்ணிகையா என்ன சேர்க்காவிட்டாலும் அவள் கண்ணிகை தான்.

எல்லோரும் சேர்ந்து இன்னும் குடித்தபாடில்லை. பரபரப்பு கொஞ்சம் தனிந்து இருந்தது. பெத்தராசு சென்று வெகு நேரம் ஆகியிருந்தபடியால் பரலோகம் கொஞ்சம் ஆசுவாசப்பட்டு இருந்தான். பேச்செல்லாம் கூத்தை பற்றி தான். உரையாடல் கூத்து கட்டி கொண்டிருக்கையில்”ஏன்பா பரலோகம்…

அசலூரு நாடகத்துலலாம் வேசம் கட்டுற

நம்ம கூத்துக்கு கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணுப்பா” என்று அதட்டலாக சொன்னான் அய்யாவு.

முகத்தில் இரத்தம் வழிய “ஏலே உன் கூத்தும் என் நாடகமும் ஒன்னா” என்று கோப்பை மதுவை குடித்து விட்டு முரண்டுபிடித்தான் பரலோகம்.

நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. எல்லோரும் போதையின் வாசலில் விழுந்து கிடந்தனர். வெஞ்சுடர் வருகைக்கு பெரிய நாழிகை எதுவும் இல்லை. அய்யாவுவுக்கு ஒரு வழியாக முழிப்பு கண்டது. கருமுண்டத்தையும் பரலோகத்தையும் எழுப்பி விட்டு மூக்குறுஞ்சியின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்.

“எல்லோரும் வெரசா கிளம்புங்க மதிய சாப்பாட்டுக்கு அங்க இருக்கனும்” என்றான் கருமுண்டம் சோம்பலை முறித்து கொண்டே.

“எப்படி போ போறோம்…

ஊரே காப்ராவா இருக்கு…

பஸ்ஸு எதுவும் ஓடல

முதல அங்க திருவிழா இருக்கா கூத்து நடக்குமா” என்றான் அய்யாவு. போதைக்கு முன்பு கேட்கவேண்டியதை தெளிந்த பிறகாவது கேட்டானே.

“அதலாம் நடக்கும்

நீ ஆக வேண்டிய வேலய பாரு நான் வேற ஏற்பாடு செய்றேன்” என்றான் கருமுண்டம்.

“சரிபா சந்தோசமா போய்ட்டு வாங்க” என்றான் பரலோகம்.

“ஏய் பேசாம வாப்பா” என்றான் கருமுண்டம் அதட்டலோடு. அதற்கு மறுமொழி எதுவும் கூறாமல் பீடியை பற்ற வைத்தான். தலை மட்டும் மெல்ல அசைந்தது.

ஊரே துக்கத்தில் இருந்ததால் அமைதியாகி கிடந்தது. கலவரமாகி போய் விடும் என்று லாரி ஓட்டுபவர்களும் கூட வர மறுத்து விட்டனர். இப்போது அவர்கள் முன்னே இருந்தது நடைபயணம் மட்டும் தான். மெள்ள பூம்பாறையிலிருந்து கொடைக்கானல் பண்ணைக்காடு வழியே தேவதானப்பட்டியை அடைந்து அங்கிருந்து சிரிரங்கபுரம் செல்வது தான் ஒரே வழி ஆனால் அப்படி செய்தால் பொழுது சாய்ந்து விடும். அதனால் அகமலைக்குள் புகுந்து அல்லிநகரம் வந்து சிரிரங்கபுரத்தை அடைந்து விடலாம் என முடிவு செய்தார்கள். சொல்வதென்பது எளிது ஆனால் அகமலையின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்து வெளியே வருவது கொஞ்சம் விசனமான விசயம் தான்.

எல்லோரும் பெட்டிகளை கட்டிக் கொண்டு அரிதாரம் பூச ஆயத்தமானார்கள் . வெகு நேரம் காத்திருந்தும் பெத்தராசுவை கண் காணவில்லை. பரலோகம் பொறுக்காமல் வேகப்படுத்த; சரியாக காலை ஆறு மணிக்கு அகமலையின் ஒற்றையடி பாதையை தேர்வு செய்து நடக்க தொடங்கினார்கள். கருமுண்டம், அய்யாவு முன் நகர பரலோகமும் மூக்குறுஞ்சியும் பின் அசைந்தார்கள். சிறிது நேரத்தில் தூரமாக பெத்தராசு வருவதை கண்டு பரலோகம் தவிர்த்து எல்லோரும் நின்றார்கள். பெத்தராசு அவர்களை பின் தொடர்ந்து மெதுவாக நடந்து வந்தான். எதுவும் பேசவில்லை. பேசுவதாக உத்தேசமும் இல்லை அப்படியே பேசினாலும் வார்த்தைகள் குளிரில் கம்பளி போர்த்தி தொண்டைக் குழியில் படுத்து கொண்டது.

மலைப் பயணம் இவர்களுக்கு புதிதில்லை ஆனால் இந்த முறை எதோ ஒரு பதட்டம் இவர்களை தொற்றிக் கொண்டது. அதை பயம் என்றும் சொல்லிவிட முடியாது. அருநெல்லி, நரிவேங்கை, மயிர் மாணிக்கம் என எண்ணில் அடங்கா மரங்களும் தாவரங்களும் அவர்களுக்கு காணக்கிடைத்தன. அது இன்னதுதானா என்று அவர்களுக்கு தெரிந்திட வாய்ப்பில்லை அதை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு பெரிதாக விருப்பமில்லை.

மெள்ள நகர்ந்தவர்கள் ஊரடி காப்பி தோட்டத்தை நெருங்கினார்கள். காப்பி கொட்டைகளின் வாசத்தை என்னவென்று சொல்வது. எல்லோரும் உச்சி முகர்ந்து மெய் சிலிர்க்க மயக்கத்துடன் நடக்கலானார்கள். அரசவால் ஈப்பிடிப்பானும் ஊதாத் தேன்சிட்டும் அவர்களை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததன. அவர்கள் நால்வருக்கும் யாரோ தங்களை பின் தொடர்ந்து வருவது போல் இருந்தது. பின்னாடி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான் பெத்தராசு. கால்கள் நோகாமல் போகும் பாதையில் கவனம் செலுத்திச் சென்றார்கள். சட்டென ஒரு சத்தம். எல்லோரும் திடுக்கிட்டு நின்றார்கள். அங்கும் இங்குமாக எல்லோரும் பார்த்து கொண்டு இருந்தார்கள். ‘ஒன்னுல்ல நடங்க டேய்’ கருமுண்டத்தின் அந்த வார்த்தை ஆறுதலாக இல்லை. நொச்சி இலைகளும் பட்டிலுப்பைகளும் அவர்கள் கால்களில் மிதிப்பட்டன. அதைக்கண்டு பூங்காற்று சினங் கொண்டதோ என்னவோ சட்டென வேகமெடுத்து அவர்கள் முகத்தில் பட்டென்று வீசியது. பெத்தராசுவுக்கு என்னவோ போல் இருந்தது. திரும்பிய வண்ணமே இருந்தான். எங்கும் மரங்களும் மலைப்பாறைகளும் தான் கண்ணில்பட்டன. மறுபடியும் அதே சத்தம் இந்த முறை ‘பா’ என்று கேட்டது. தூரத்தில் உள்ள மரப் பொந்தின் இடையில் இருந்து தான் வந்திருக்க கூடும். சூரியன் உதித்த பிறகும் வெண்ணிலவுக்கு என்ன வேலை என்பதைப் போல பூங்காற்றின் அசைவினால் விழுந்த மரக்கிளையில் இடறி விழுந்திருந்தாள் வெண்ணிலா. பெத்தராசுவின் வெண்ணிலா. வானத்து வெண்ணிலாவுக்கு உண்டான அத்துனை சிறப்புகளும் இந்த வெண்ணிலாவுக்கும் உண்டு. அவளை பார்த்த கணமே நிலா என்று ஓடி சென்றான் பெத்தராசு.

“ஆமா இவ எங்கடா இங்க வந்தா” கருமுண்டத்தின் வாயை பிடுங்க அய்யாவு கேட்டான்.

“ஏன்டா உங்கூடதான வாரேன் அப்புறம் ஏன் கிட்ட கேக்குற” என்று அலட்டிக் கொண்டான் கருமுண்டம்.

“இந்த பிள்ள தான் நம்ம பின்னாடியே வந்துட்டு இருந்துருக்கு…

அப்பன பிரிஞ்சு இரண்டு நாள் கூட பொறுக்க முடியாம வந்துருக்கு…

பாரேன்

அந்த கிழவி இந்நேரம் எளவ கூட்டிருக்கும்” என்று சிரித்தான் மூக்குறுஞ்சி.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த பாறை முகட்டில் அமர்ந்து வேட்டியை விலக்கி டவுசரில் இருந்த பீடியை எடுத்து இழுக்க தொடங்கினான் பரலோகம்.

வேகமாக மூச்சிரைக்க ஓடிய பெத்தராசு வெண்ணிலாவிடம் போய் நின்றான். அவள் முகத்தில் அசடு வழிந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவளை வசவு பாட அவனால் எப்படி முடியும்.

“ஏன்டா மா இப்படி வந்த”

“நானும் உன் கூட வாரேன் பா” என்றாள் வெண்ணிலா.

“ஏலேய் உங்க அப்பன் மவ பாசத்த கொஞ்சம் அடக்கி வைங்கடா தாங்க முடில” அய்யாவு கொஞ்சம் அலுத்துக் கொண்டான்.

“டேய் வெரசா நடங்க டா காட்டெருமை சுத்துர இடம்” எச்சரித்துக் கொண்டே முன் சென்றான் கருமுண்டம்.

பீடியை மொத்தமாக வழித்த பிறகும் எழ மனமில்லாமல் முன்னே சென்ற அவர்களை பார்த்துக் கொண்டே எழுந்தான் பரலோகம்.

“டேய் அடுத்த வாரம் புதன் கிழம வக்கம்பட்டி முனுசாமிக்கு பதினாறாம் நாளு…

மறந்துறாத…” மூச்சிறைக்க முன்னே நடந்து கொண்டு சொன்னான் அய்யாவு

“ஆமாப்பா

அதுக்கு என்னத்த கட்ட” என்று குழப்பத்துடன் கேட்டான் கருமுண்டம்.

“இன்னைக்கு கட்றதயே கட்டிற வேண்டி தான்” என்றான் அய்யாவு.

நீண்ட நெடும் பயணத்தின் முடிவாக அல்லிநகரத்தை அடைந்தார்கள். சிங்காரம் தெருக்கூத்து கலைக்குழு என்று எழுதியிருந்த பெட்டியை கீழே வைத்து விட்டு மூக்குறுஞ்சி வியர்த்து கொட்டிய முகத்தை துடைத்து எடுத்தான்.

“ஒரு வழியா ஊரு வந்து சேர்ந்தாச்சு” என்று பெருமூச்சுவிட்டான் அய்யாவு.

“ஏலேய் இன்னும் போனும் டா…

இங்க காலைல டிபன சாப்டுட்டு கிளம்புவோம்…

போற வழில மணிவண்ணனையும் கொட்டுக்காரங்களையும் கூட்டிகிட்டு போனும்” என்றான் கருமுண்டம்.

கைகழுவி வாயைத் தொடைத்து எடுத்து கொண்டு இருக்கும் போது. மொக்கை வேகமாக ஓடி வருவது தெரிந்தது. பூங்காற்றின் இருப்பிடத்தை சிதைத்துகொண்டு அவன் வந்ததில் பூங்காற்று அவனுக்கு விலகி வழி விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மூச்சை இறைத்து கருமுண்டத்தின் முகத்தில் விட்டான். அவனை பார்த்துக் கொண்டே கடவாயில் சிக்கிய கருத்த வேப்பிலையை எடுக்க முற்பட்டான். அவனோ நிறுத்தி நிதானமாகவே சொன்னான்.

“டேய் கருமுண்டம்!!

உங்களுக்கு தான்டா ரொம்ப நேரமா காத்துக் கிடக்கேன்

நம்ம இராஜபாட்டை மணிவண்ணன் இருக்கான்ல

அவன் மருந்த குடிச்சுடான்டா”

கடவாயில் சிக்கியது இப்போது நெஞ்சம் வரை இறங்கியது. எதுவும் பேசாமல் அப்படியே நகர்ந்து சென்று உட்கார்ந்தான் கருமுண்டம். மணிவண்ணனை கூத்து கட்ட அழைத்து சென்று விடலாம் என்று கொஞ்சம் பேராசையுடன் இருந்தான் கருமுண்டம். அய்யாவு முகத்திலும் கொஞ்சம் பதட்டம் தொற்றிக் கொண்டது. மூக்குறுஞ்சி அவன் பெயருக்கு ஏற்ற வேலையை செய்து கொண்டிருந்தான். பரலோகம் பெரிதாக முகபாவங்களை உதிர்க்கவில்லை. பெத்தராசுவோ வெண்ணிலவை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான். வேறென்ன வேலை இருக்க போகிறது அவனுக்கு. மெள்ள நகர்ந்தான் கருமுண்டம். சிரிரங்கபுரம் பட்டாளம்மன் கோவில் வரும் வரை அவன் முகத்தில் ஈயும் ஆடவில்லை சொல்லும் ஆடவில்லை. அல்லிநகரம் மணிவண்ணன் தான் கொஞ்ச நாட்களாக சிங்கார தெருக்கூத்து கலைக்குழுவுக்கு அதரவளித்து வந்தான். மன்னாதி மன்னனின் பெயரை சூட்டியதில் இருந்தே அந்த இராஜபாட்டை மருதூர் கோபாலனின் மீது பித்து கொண்டு அலைந்தவன். அதனால் அவன் மீது பழியை போட்டு என்ன பயன்.

“பரலோகம் நீதாம்ன்டா ஆட்டக்காரனா வேசம் கட்டனும்” என்று அய்யாவு சொல்லி முடிப்பதற்குள் பரலோகம் சொன்னான்.

“எது…

போங்கடா போக்கத்தவய்ங்களா வேசம் கட்டனுமாம்ல வேசம்

நான் இப்பலாம் ஒயில தவிர வேற எதையும் தொடுரதில்ல”

“நேத்து கேட்டப்ப மண்டைய மண்டைய ஆட்டுன

இப்ப என்னடானா இப்படி பேசுற

மனசில்லாதவன் அப்புறம் எதுக்குடா இவ்வளவு தூரம் வந்த” என்று அதட்டினான் கருமுண்டம்.

“நேத்து அப்படியா சொன்னேன்…

ஒக்காளி போதைய போட்டாலே இப்படி தான்”

“டேய் கொஞ்சம் மனசு வைடா” அய்யாவு கெஞ்சினான்.

பரலோகத்திற்கும் கொஞ்சம் வேசம் கட்ட வரும். கூத்தில் கிடைத்த வசூலை பார்த்து பரலோகமும் கூத்து கட்ட தொடங்கினான். கருமுண்டம் ஊரில் இல்லாத நாட்களில் கூத்து கட்ட கற்றிருந்தான். பீடியை இழுத்து கொண்டே மவுனத்தை படறவிட்டான். மறுப்பு சொல்லாத வரை சந்தோஷம் என்று அய்யாவு அவனை அரிதாரம் பூச அனுப்பி வைத்தான்.

“பரலோகம் ஒரு ஆட்டக்காரன் இன்னோரு ஆட்டக்காரன் வேணுமே..

இப்ப என்ன பண்ணப்போற

பேசமா நீ ஆடு கருமுண்டம்” அய்யாவு எவ்வளவோ கேட்டும் கருமுண்டம் வேசம் கட்ட மறுத்துவிட்டான். செய்த சபதம் அப்படி.

“இரு யோசிப்போம்”

“என்னத்த நீ யோசிச்சு

கூத்த நடத்தி

விடிஞ்சிறும்” என்று சலித்துக் கொண்டே படபடத்தான் அய்யாவு. .

“அண்ணே கூத்த முடிச்சுட்டு மதுரைக்கு போய் ஆத்தா மீனாட்சிய பார்த்துட்டு அப்படியே பனமரக் கடையில் பிரியாணி சாப்பிட்டு வருவோம்ணே” என்றான் மூக்குறுஞ்சி முப்பதும் தெரிய.

“த்தா கூத்தே நடக்குமானு தெரில..

பிரியாணியாம்…

போய் வேலைய பாருடா வெளக்கென்ன” என்றுக் கூறி மூக்குறுஞ்சி தலையை தட்டி விட்டு சென்றான் கருமுண்டம்.

பரலோகம் அரிதாரம் பூச தொடங்கி இருந்தான். மூக்குறுஞ்சி கொட்டாச்சிகளை தேடிக் கொண்டு இருந்தான். அய்யாவு வந்தனம் பாட எட்டுக் கட்டையுடன் காத்திருந்தான்.

பட்டாளம்மன் கோயில் திருவிழா கலைக்கட்ட தொடங்கி இருந்தது. திருவிழா என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. அந்த ஊர் பெரிய தலக்கட்டின் நேர்த்திக்கடன் தான் அப்போது திருவிழாவாக உருப்பெற்று இருந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தார்கள். சுற்றும் முற்றும் பதினெட்டு பட்டி பெரிய கைகளும், பட்டாளம்மனின் வகையறாக்களும் வந்திருந்தனர். இவர்களுடன் அகமலையின் மரக்கிளைகளில் மாட்டிக் கொண்டு தப்பித்த அந்த பூங்காற்றும் வருகை தந்திருந்தது. வருசநாட்டு மைனர் நாகப்பனும் அவன் கூடவே இளங்குமரி ஒருத்தியும் அம்பாசிடர் காரில் வந்தார்கள். அவன் இறங்கும் இடத்தில் வழிமறித்து தன் சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. எதிர்பாராமல் மைனர் மீது மோத வெண்ணிலா பட்டென்று கீழே விழுந்தாள். அவளை இறுக பிடித்து தூக்கி நிறுத்தியவன் அவள் கன்னங்களை பலமாக கிள்ளினான். வலித்ததோ என்னவோ சட்டென நகர்ந்து தன் தந்தையை தேடி ஓடினாள் வெண்ணிலா. அதுவரை ஒய்யாரமாக காருக்குள்ளே உட்கார்ந்து இருந்த அந்த இளஙகுமரி அப்போது தான் வெளியே வந்தாள்.

மைனர் என்ற பேருக்கு ஏற்றாற் போல் நல்ல வடிவுடன் தான் இருந்தான். அவன் பெயருக்கு பின்னால் ஒட்டுன்னி போல ஒன்று தொற்றிக் கொண்டு வரும் அது எதற்கு நமக்கு. நாகப்பன் என்பது கொள்ளு பாட்டனின் பெயர். அதை வேண்டா வெறுப்பாக சுமந்துக் கொண்டாலும் அது அவனுக்கு தகுந்த பெயர் தான். பெண்களின் மேல் தீராத காதல் கொண்டவன் என்று தன்னை தானே சொல்லிக்கொள்வான். ஆனால் ஊரார் அவனை, நிற்க என் மொழியில் சொல்வதாயிருந்தால் ‘வருசநாட்டு வீதிகளில் உலவும் பெண்களை தேர்ந்தெடுப்பவன்’ என்று சொல்லலாம். அவர்களின் வட்டார மொழியில் சொல்லப்போனால்! அது எதற்கு இங்கே. அந்த பெயர் நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல முன்னூறு ஆண்டுகளாய் அவர்களோடு பிரியாமல் தாங்கி நிற்கும் எருமார்பட்டி ஜமீனின் குலப் பெயர். ஊருக்குள் வந்தவுடனே புரணிகள் எல்லோர் வாயிலும் அமர்ந்து இருந்தது. ‘இது எவடி புதுசா..’ ‘அடுத்தவன் புருசன வழச்சு போடனும்னே வருவாளுக போல’ ‘இவ மைனரோட புது கூத்தியாளா’ ‘ஆள் நல்ல கிழங்கு மாதிரி தான் இருக்கா’ இவையெல்லாம் அவள் காதுகள்படவே பேசப்பட்டன. ஆனால் இவற்றை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை அந்த வருசநாட்டுக்கு வாழ வந்தவள். பதினைந்து திங்களுக்கு முன் தான் அவள் அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வந்தாள். வந்தவுடனே வருசநாட்டு மைனர் வீட்டுக்கு வேலையாள் ஆக சேர்ந்து குப்பை கொட்ட தொடங்கிவிட்டாள். அப்போது இருந்து எங்கு சென்றாலும் அவளை அழைத்து போவது மைனரின் வழக்கம்.

பெத்தராசு வழக்கம்போல கருப்பு கோட் சூட்டுடன் தொப்பி அணிந்து கைக்குட்டைகளையும் புறாக்களையும் வைத்துக் கொண்டு கற்ற வித்தையை பயிற்சி செய்து கொண்டிருந்தான்.அவனருகே பரலோகம் கிடா ஒட்டு மீசையும் நீண்டு வளர்த்த ஒட்டு தாடியையும் ஒட்டி கொண்டு கையில் கமண்டலும் வாயில் பீடியுமாக அமர்ந்திருந்தான். மூக்குறுஞ்சி சீலையின் மாராப்பை சரி செய்து கொண்டே பரலோகத்தின் குமட்டை இடித்துவிட்டு நகர்ந்தான். புகை நாலாப்புறமாக பரவியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வில்லை. ஆனால் எதுவுமே நடக்காததை போல ஒரு பாவனையை இருவரும் முகத்தில் ஒப்பனை செய்து வைத்திருந்தார்கள்.

வெரசாக தர்மகர்த்தா அங்கே வந்து அய்யாவு காதில் சில வார்த்தைகளை போட்டு விட்டு போனார் “ஏப்பா கூத்த கொஞ்சம் தள்ளி வச்சுகுறுங்க! பன்னண்டு மணி போல ஆரம்பிங்கனு சொல்றானப்பா” என்றான் அய்யாவு.

“ஏன்வாம்” கருமுண்டம் கேட்டான்.

“அந்த பசப்பி ஆட்டம் போட வந்துருக்காளாம்”

“எவடா”

“கம்பம் பூமாரிய தான் அண்ணே அப்படி சொல்லுது” மூக்குறுஞ்சி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“அந்த சிறுக்கியா!

நாசமா போச்சு…

அந்த அவ்சாரி வந்து ஆட்டம் போட்ட

மொத்த கூத்தும் ஆட்டம் கண்டுரும்….

இன்னைக்கு கூத்து நடந்த மாறி தான்”

“கட்டன் ரைட்டா சொல்லிரு பத்து மணிக்குலாம் கூத்து கட்டிருவோம்னு” கருமுண்டம் உறுதியாக சொன்னான்.

“ஏலேய் கூத்து கட்டிருவோம் கட்டிருவோம் சலம்புறியே எவன வச்சு கட்டுவ” அய்யாவு குரல் உசந்தது.

“நான் வேனா கூத்து ஆட வா

இல்லணே நீயும் ஆடமாட்டேனுட்ட

வேற ஆளும் இல்ல

அதான் நான் ஆடவானு கேட்டேன்” நடுவில் வார்த்தைகளால் கருமுண்டத்தின் சொல்லை வழிமறித்தான் பெத்தராசு. அந்த உரையாடலை பார்த்து கொண்டே இருந்த பெத்தராசு எந்த தயக்கமும் இன்றி நாசுக்காக கேட்டான். கொஞ்சம் காசுக்காகவும் தான்.

அய்யாவுக்கும் கருமுண்டத்துக்கும் சிரித்து முடிக்க மீநுண் விநாடிகள் கிடைக்கவில்லை. மூக்குறுஞ்சிக்கோ வெகு நேரமாகிவிட்டது. நல்ல வேளை அப்போது பரலோகம் அங்கில்லை அந்த வார்த்தைகளை கேட்க.

“ஏலேய் உனக்கு உன் வித்தையே ஒழுங்கா வராது

இதுல நீ கூத்து கட்ட போறியா

சும்மா இருப்பா”

“அண்ணே ஒரு வாய்ப்பு குடுணே

நான் நல்ல நடிப்பேன்ணே”

“ஆமா இவரு பெரிய இராஜபாட்டு கூத்து கட்டி கிழிப்பாரு

வருச கணக்கா நடிக்கிறவனுக்கே டவுசர் கிளியுது

வந்துட்டான்…

சொன்னா கேளு இதலாம் உனக்கு சரி வராது.

பேசாமா போ” என்றான் கருமுண்டம்

“இல்ல இல்ல இப்ப இது தான் சரியான முடிவு…” என்றான் அய்யாவு.

“என்னடா நீயும் இவன் கூட சேர்ந்து உளர்ற”

“உளறல எப்பே

இப்ப ஆள் இல்ல

அதுவும் இல்லாம இன்னும் ஒரு மணி நேரத்தில கூத்து கட்டியாகனும்…

இல்லனா நம்ம பகுமானம் பஞ்சா காத்துல பறந்துரும்” பதறிப் போய் சொன்னான் அய்யாவு.

“நீ என்னா யோசிச்சு இருக்க” அய்யாவு சட்டென கேட்டான்.

“இல்ல பரலோகத்த இரட்டை வேசம் போட சொல்லி…” என சொல்வதற்குள் அய்யாவு “அவன் ஒரு வேசத்துகே என் பாதி ஜீவன் போயிருச்சு இதுல இன்னொன்னா…

நீயே பார்த்தல்ல”

“இப்ப என்ன தான்டா பன்றது” கருமுண்டம் கேட்டதற்கு அய்யாவுவால் வேறு என்ன நல்ல முடிவை சொல்லி விடமுடியும்.

“வேற வழியே இல்ல ராசு தான் வேசம் கட்டியாகனும்”

“ஏலே மூக்குறுஞ்சி இவனுக்கு நல்ல அரிச்சந்திரன் வேசம் கட்டி கூட்டியாடா” என்று சொல்லி அய்யாவு பெத்தராசுவை வழியனுப்பி வைத்தான்.

ஒப்பனை அறைக்கு கூட்டி வந்து பூமாரியிடம் அறிமுகப்படுத்திவிட்டு. வெளியில் மைனரின் சத்தத்தை கேட்டு ஓடிவிட்டான் மூக்குறுஞ்சி.

“நீ தான் அரிச்சந்திரனா நடிக்க போறியா” என்றாள் பூமாரி.

“ஆமா” நெளிந்து கொண்டே சொன்னான் பெத்தராசு.

“இதுவரைக்கும் எத்தன கூத்து கட்டியிருக்க” மடிமீது கிடந்த தன் பிள்ளையின் வாயில் முலை காம்பை வைத்துவிட்டு கேட்டாள்.

“இது தான் மொத தடவ” தரையை பார்த்துக் கொண்டே சொன்னான் பெத்தராசு.

“ஹா ஹா ஹா” என்ற அவளின் நமட்டு சிரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தது. குழந்தை வீறிட்டு அழுதது. விலகிய காம்பை மீண்டும் திணித்து விட்டு சிரித்தாள். இந்த உரையாடலை யாரோ கவனிப்பதை அவர்கள் இருவரும் அதுவரை உணரவில்லை. மைனருக்கு வெகு நாளாகவே பூமாரியின் மீது ஒரு கண் இல்லை இரண்டு கண். அவள் எங்கு ஆட்டம் போட சென்றாலும் ஆட்டம் பார்க்க ‘உள்ளேன்’ சொல்வது வழக்கம். பூக்கள் இருக்கும் இடத்தில் வண்டுக்கு வேலை இருக்க தானே செய்யும். பூமாரியும் இந்த மைனரை போல மேற்கே ஒரு மைனரின் ஆசை வார்த்தைகளை நம்பி வயிற்றில் வரத்தை வாங்கிக் கொண்டாள். அதை அவமான சின்னமாக நினைக்காமல் தன் திறமைக்கு ஆண்டவனின் பரிசு என ஏற்றுக் கொண்டு; ஏமாற்றம் அடைந்ததைக் கூட மனதில் புதைத்து கொண்டு வைராக்கியத்துடன் பிழைப்பு நடத்துகிறாள்.

அரிதாரத்தை அளவாக பூசி அரிச்சந்திரனுக்கு அழகு சேர்க்க ஆயத்தமானான் பெத்தராசு. அதற்குள் பூமாரியும் தன் மாராப்பை சரிசெய்து கொண்டாள். தந்தையின் புது அவதாரத்தை பார்த்து வாய் பிளந்து நின்றாள் வெண்ணிலா. பூமாரியின் குழந்தையை கண்டவுடன் வேகமாக அருகிலே சென்று அந்த பிஞ்சு கைகளை பிடித்து கொண்டாள் வெண்ணிலா. ராசுவின் ஒப்பனையில் கொஞ்சம் மனசாந்தி அடைந்திருந்தான் கருமுண்டம். தர்மாகர்த்தாவையும் ஒரு வழியாக தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டான் அய்யாவு. எல்லாம் சரியாக நடப்பதாக அங்கே ஒரு மாயை பின்னப்பட்டிருந்தது. அதை கண்டு அந்தகாரத்தில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. யார் கண்டா அது அந்த பட்டாளம்மனாக கூட இருக்கலாம்.

“ஏலேய் ராசு நீ நடிக்க போறது என்ன கத என்ன கதாபாத்திரம்னு தெரியுமா

அரிச்சந்திரன் கதைல அரிச்சந்திரனா நடிக்க போற”

பெத்தராசு முகத்தில் அத்துனை மகிழ்ச்சி.

“ஆமா…

அரிச்சந்திரன் கத தெரியும்ல” அய்யாவு கேட்டதற்கு எந்த வித குழப்பமும் இல்லாமல் தீர்க்கமாக சொன்னான் பெத்தராசு.

“தெரியும்னே எமன் கிட்ட மல்லுகட்டி நிக்க அவன் பொண்டாட்டி வந்து காப்பாத்துவாளே அதான”

“ம்ம் அதான்” பேச்சு வாக்கில் சொன்னான் அய்யாவு.

“அண்ணே” பதறினான் மூக்குறுஞ்சி.

“எது எமன் கிட்ட மல்லுக்கு நிப்பாளா” அய்யாவு பதற.

“கிழிஞ்சுது போ” தலையில் கைவைத்து சொன்னான் கருமுண்டம்.

“டேய் அரிச்சந்திரனாலே யாருனு தெரியாதா” அய்யாவு கேட்டான்.

“டேய் என்னடா இவன் நேரங் கெட்ட நேரத்துல தாலியறுக்குறான்” கருமுண்டம் கொஞ்சம் கலங்கினான்.

“டேய் அவனுக்கு அரிச்சந்திரன் கதயே தெரியாதுங்குறான்…

நீ வேசங் கட்ட சொல்லிட்ட” கருமுண்டம் அய்யாவுவை கோபித்துக் கொண்டான்.

“கத வேனா தெரியாம இருக்கலாம்…

ஆனா ஒரு பக்க வசனத்த மூச்சு விடாம பேசுவான்…

சுப்பராசு மவன் அதாலாம் பண்ணிருவான்…

நீ கொஞ்சம் காப்பி தண்ணிய குடிச்சிட்டு அமைதியா இரு” ஆறுதல் சொல்லி நகர்ந்தான்.

வளர்பிறையின் ஐந்தாம் திங்கள் கூத்தை காண வானில் வந்து நின்றது. இரவு பத்து என்பதே தெரியாமல் ஜனக்கூட்டம் கூடி இருந்தது. பலர் கம்பத்துக்காரியின் ஆட்டத்தை காண காத்திருந்தனர், சிலர் அம்மனின் உச்சி கால பூஜை முடியும் வரை பொறுத்திருந்தனர். ஓரிருவர் மட்டும் கட்டியங்காரனின் வருகையை எண்ணி திரைசீலையை கண் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

தேனி வட்டம் பின்பாட்டுகாரர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். கருமுண்டம் ஆர்மோனியம் சகிதம் அவர்களோடு அமர்ந்து இருந்தான். மத்தளம், தாளம் மற்றும் முகவீனையும் இடம் பெற்று இருந்தது. களரி கட்டுதல் ஆரம்பாமாகி இருந்ததை உறுதிப்படுத்த கட்டியங்காரனாக அய்யாவு மக்கள் முன் தோன்றி இருந்தான்.

“அதாகப்பட்டது…

அன்பார்ந்த சிரிரங்கபுர கிராம பொதுமக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

திண்டுக்கல் மாவட்டம்…

கொடைக்கானல் தாலுக்கா…

பூம்பாறை கிராமம்…

சிங்காரம் தெருக்கூத்து கலைக்குழு சார்பாக நடத்தக் கூடிய சம்பூர்ண அரிசந்திரா என்ற காவியத்தை காண வருகை தந்திருக்கும் அனைவருக்கும் சிங்காரம் தெருக்கூத்து கலைக்குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு

இனிதே இந்த தெருக்கூத்தினை தொடங்குகிறோம்…

நன்றி வணக்கம்…” என்று சொல்லி முடிக்கும் போது திடிரென மின் விளக்குகள் அனைந்தன. இருள் மெள்ள அந்த இடத்தை கைப்பற்றி கொண்டது. நீண்ட நேரமாகியும் இருள் விலகுவதற்கான அறிகுறி தெரியவில்லை. சிறிது நேரத்தில் சலசலப்புகள் எழுந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தார்கள். சட்டென ஒரு அலறல் எல்லோரும் திடுகிட்டார்கள். எல்லோர் வாயும் ‘என்னாச்சு’ என்ற வார்த்தையால் நிரம்பி இருந்தது.

இருள் விலகிய போது, பெத்தராசுவும், பரலோகமும் முகத்தில் இரத்தம் வழிய தேனி போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து இருந்தார்கள். இருவரும் கம்பிக்கு பின் அமர்ந்து இருக்க கம்பி முன் இருந்த சுவற்றின் மணிக்காட்டியில் இரண்டு முள்ளும் ஒன்றை ஒன்று தழுவி மேல் நோக்கி இருந்தது. கம்பிகளுக்கு அருகே மிக சமீபத்தில் கருமுண்டம், பரலோகம் மற்றும் மூக்குறுஞ்சியும் உட்கார்ந்து இருந்தார்கள்.

“டேய் என்னங்கடா…

எத்தன நாளா திட்டம் போட்டீங்க மைனர போட்டு தள்ள” என்று கேட்டார் அங்கிருந்த ரைட்டர்.

“ஐயா நீங்க வேற ஒண்ணு கணக்கா ஒண்ணு சொல்லி சோளிய முடிச்சுபுடாதீங்க” என்றான் கருமுண்டம்.

“ஆமாங்கயா தயவு பண்ணி எங்கள விட்டீங்கனா உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்” அய்யாவு இடையில் கட்டியங் கட்ட நினைத்தான்.

“தெய்வமே என்ன டவுசரோட அனுப்புனீங்கனா கூட சந்தோசம்னு ஊரு பக்கம் போயிருவேன்” தன் பங்குக்கு மூக்குறுஞ்சியும் ஒரு சொல்லை போட்டு விட்டு மாராப்பை இழுத்துக் கொண்டான்.

கம்பிகளுக்கு பின்னே பரலோகம் தலைக்கு கையை வைத்து ஒருகணித்தான். பெத்தராசு நிலவை தொலைத்த ஆகாயத்தை போல பிரம்மை கொண்டு இருந்தான்.

“சார் நைட்டு டிபன் எதும் வாங்கி தர்ற உத்தேசம் இருக்கா” தயங்கி தயங்கி கேட்டான் மூக்குறுஞ்சி

“ஏன்டா”

“இல்ல அப்படி எதுவும் இருந்தா பொரட்டா இல்லனா பிரியாணி வாங்கி யாற சொல்லுங்க சார்…”

“எகத்தாளம் தான்டா

டேய் எல்லோரும் ஒழுங்கு மரியாதையா பேசாம இருங்கடா…

இன்ஸ்பெக்டர் ஐயா வர்ற நேரம் ஆச்சு

இன்னைக்கு உங்களுக்கு இங்க தாண்டி கச்சேரி…” என சப் இன்ஸ்பெக்டர் அவர்களை அடக்கி வைத்துவிட்டு ரேடியோவை சரி செய்து கொண்டு இருந்தான்.

“டேய் இப்படி மச மசனு உட்கார்ந்து கிடந்தீங்கனா ஒரு வருசம் ஆனாலும் இங்க இருந்து போய்கிற மாட்டீங்க…

காசு கீச கொடுத்து தாஜா பண்ணுங்கடா” மெல்ல அய்யாவு காதில் ஓதினார் அருகே இருந்த ரைட்டர்.

“ம்ம் எம்புட்டுங்கயா” என்றான் பரிதாபமாக அய்யாவு.

“ஆன் ஒரு இரண்டாயிரத்த கொடுத்துட்டு போங்கடா”

“ஆத்தி…

ஏன் மொத்த கூத்து காசே அவ்வளவு வராதே” என்று கருமுண்டம் புலம்பினான்

“அப்புறம் உங்க இஷ்டம நான் ஒன்னும் சொல்லறதுகில்ல”

அன்று இரவு நடந்த சம்பவத்தில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை. தன் தந்தை வயது இருக்கும் ஒரு ஆண் இப்படி செய்வாரா? என்ற கேள்வி மட்டும் அவள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. பூமாரியின் அழகினை பார்த்து சபலபட்டவனுக்கு எதை கண்டு வெண்ணிலவின் மேல் சபலம் வந்ததோ தெரியவில்லை. அன்று பரலோகமும் பெத்தராசுவும் கூத்து கட்ட செல்லும் போது ஒப்பனை அறையில் ஒரு சிறிய சலசலப்பு வந்து கொண்டு இருந்தது. என்னவென்று போய் பார்க்கும் போது ஐந்தடி சர்ப்பம் ஒன்று வெண்ணிலவை தீண்ட எத்தனித்து கொண்டிருந்தது. பூமாரி எவ்வளவு தடுத்தும் அது தீண்ட துடித்தது. இதைக்கண்டு தந்தையாக பெத்தராசு துடித்ததை விட பரலோகத்தின் இரத்தம் கொதித்தது. நாவும் மனதும் வேறு வேறு தான் என பரலோகம் நினைத்தானோ என்னவோ. சர்ப்பம் தீண்டுவதைக் கண்டு ஒரே பாய்ச்சலாக தாவினான். அவனுக்கு பின்னே பெத்தராசுவும் பாய்ந்தான். மூவரும் ஒருவரை ஒருவர் கட்டி உருண்டு இருக்க சட்டென அந்தகாரம் சூழ்ந்தது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த சர்ப்பம் மீண்டும் வெண்ணிலவிடம் சென்றது. திடிரென ஒரு அலறல் இரத்த வெள்ளத்தில் அந்த சர்ப்பம் மண்ணில் வீழ்ந்து கிடந்தது. அந்த அலறலின் மறுமுனையில் ‘இச்’ என்ற முத்தச் சத்தமும் கேட்டது அதற்கு ‘மா’ என்ற மறுமொழியும் கொடுத்தது அந்த வெண்ணிலா.

அவன் வருகையை எண்ணி காத்திருந்த அந்த வெண்ணிலாவுக்கு மேகத்தினுள் மறைய ஆசையில்லை. கோயிலின் அருகே இருந்த அந்த அரசமரத்தின் நிழலில் பூமாரியின் துணையுடன் அவள் காத்திருந்தாள். புண்டரீகம் மலரும் ஓசை கேட்கும் அளவுக்கு நிசப்தம் குடிக்கொண்டிருந்தது. கைகளில் ரேகைகளையும் உதட்டில் புன்னகையையும் வாஞ்சையுடன் சுமந்து கொண்டு வரும் தன் தந்தையை எண்ணி காத்திருந்தாள். எத்தனையோ ஆசைகளோடு அங்கு வந்தவளுக்கு அத்தனையும் பொய்யாய் போனதற்கு அந்த பூங்காற்று வந்து பதில் சொல்லிட போவதில்லை.

அந்த இருட்டறையில் கம்பிகளுக்கு பின்னே அமர்ந்திருந்த பெத்தராசுவின் மேல் மேவிய பூங்காற்று அவனை பல ஞாபக சூழலுக்குள் மூழ்கடித்தது. ஒவ்வொரு முறையும் வேலைக்காக ஊர் திரும்பி வரும் போது அவள் ஆசையாக கேட்டதை வாங்கிக் கொண்டு வர முடியாத வக்கத்த தந்தையாக தான் நடைப்போட்டு உள்ளே வருவான். வெறுங்கையை வீசி கொண்டு வந்தவனின் கையை ஒரு தாமதம் பார்த்திருந்தாலும் அங்கேயே செத்திருப்பான் ஆனால் அவள் ஒருபோதும் அவன் கைகளை கவனிப்பதில்லை. தூரதேச போர் களத்தை வென்று வரும் ஒரு இராஜகுமாரனாக தான் அவள் முன் எப்போதும் தோன்றுவான்.

“டேய் கண்ணுல தண்ணி வருதா…

கழுத அத எதுக்கு புடிச்சு நிறுத்திகிட்டு இருக்க

அந்த கருமத்த வெளிய விடு போய் தொலையட்டும்

அது என்ன பாவம் பண்ணுச்சு” என்று தூக்கம் கலைந்த பரலோகம் சொல்லும் போதே அந்த பூங்காற்று கண்ணதாசனின் வரிகளில் மலையாள வாடையில் வீசி கொண்டிருந்தது. அந்த பாடலை மென் புன்னகையுடன் முனுமுனுத்து கொண்டிருந்தவனை பூங்காற்று நினைவுகளின் ஊடே வெண்ணிலவை அவனருகே வந்து அவன் மடியில் அமரவைத்தது. சட்டென தன் சட்டை பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து காற்றில் அசைத்து ஒரு வெண்புறாவை பறக்க செய்தான் பெத்தராசு. அதை பார்த்துக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்து தன் முகத்தை புதைத்து எப்பொழுதும் கேட்கும் அந்த ஒற்றை கேள்வியை இப்படி கேட்டாள் வெண்ணிலா “ஏன்பா உன் மேஜிக்ல நான் இராஜகுமாரியா வருவேனாப்பா?”

அதற்கு தன் பதிலாக அவன் மவுனத்தை உதிர்க்கும் போது, அந்த பூங்காற்று இதை அவன் காதுகளிள் உதிர்த்து விட்டு போனது.

“வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..வருகின்ற காற்றும் சிறுபிள்ளை ஆகும்.!

மரகதக்கிள்ளை மொழிபேசும்..
மரகதக்கிள்ளை மொழிபேசும்..!

பூவானில் பொன்மேகமும் உன்போலே
நாளெல்லாம் விளையாடும்..!

பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது..

நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..!

என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!

பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..”

போன பூங்காற்று என்ன நினைத்ததோ மீண்டும் அவனை நோக்கி வந்தது. அவன் முகத்தில் மெள்ள படர்ந்து அவன் மார்பு கூட்டுக்குள் தன்னை தானே அவனுக்கு சிறையாக்கி கொண்டது அந்த பூங்காற்று.

  • பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

உப்புக்காத்தும் நீலபுறாவும்

உப்புக்காத்தும் நீலபுறாவும்

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே விளங்குச்சு. கடலம்மா மேனில இருந்து அதுகேத்த தெம்பான உசரதுல நிதானமா சுத்துது, கூட்ட விட்டு இரை தேடி போன பிஞ்சு இன்னைக்கு  சுறாக்கு  இறையாகுதேனு அழுக கூட தெரியமா தான் சுத்துது, அந்த கடல்புறா. போன பிஞ்ச நினைச்சு இழுவாம போய் மத்த பிஞ்ச பாருனு கரையோர புன்னை மரத்த காட்டவும் எவனுக்கு வக்கில்ல அது அழுகய கேக்கவும் ஒரு நாதியில்ல அங்க தான் பருந்து ஒன்னு காத்திருக்குனு சொல்ல எவனுக்கும் வாயுமில்ல அது விதி இவ்வளவு தான்னு தேவனும் நினைக்கான் போல அவன் நினச்சுபுட்டா மறுவார்த்த ஏது. சுத்தி சுத்தி ஓயுர நேரத்துல கிழக்கா வசவான காத்து ஒன்னு அத அடிச்சு ஓரங்கட்ட பார்த்ச்சு.

அந்த உப்புகாத்து கிழக்கா கரையோரம் வீசயில அம்மியும் கொஞ்சம் ஆடி தான் போச்சு. ஆடி மாச காத்துல அமாவாசையும் சோடி சேர அந்த கடலம்மா ரெம்பவே பொங்கி போய்ட்டா. “அவ பொங்குறது இன்னைக்கு நேத்தா காலம் காலமா வந்து தான போறா அந்த பாவி மக, அவ மட்டும் இல்லையின இங்க சோறு எப்படி பொங்கும்னு” புலம்பிட்டே கிடந்தா ராக்காயி. ராக்காயிக்கு தேகம் நிலை கொள்ளல வழக்கத்தவிட கூட்டத்த கண்டதும் அவளுக்கு சந்தோஷம் தாளல.

மீன்வாடை ஒரு ஓரமா வருடையில அம்மில நல்லா வரமுளகாயா கிள்ளி போட்டு அரைக்கையில உப்புகாத்து படல் படலா மணல மேவயில கொஞ்சம் விசும்பி போன மவ எதையும் கண்டுக்குறாம அறைச்சிட்டு இருந்தா.

‘உடுப்பதற்கோ உடையுமில்லை
உண்பதற்கோ உணவுமில்லை
படுப்பதற்கோ பாயுமில்லை
பறக்குதுபார் வெள்ளத்திலே
பார்க்க பார்க்க துக்கம்
பார்த்துப் போனாலுமே ஏக்கம்’

இதையே நினச்சு வேற முனுமுனுத்துட்டே இருந்தா, அன்னிக்குனு புயல்ல சிக்கி சிதைஞ்ச வடுவ பாக்க கூட்டம் அலைமோதுச்சு. எவனுக்கு இப்படி ஆயிடுச்சேனு ஈவு இல்லமா புயலோட கைவண்ணத்த கண்டு சிலிர்த்தாய்ங்க. “ஆஹா ! என்னா அலைனு” ரசிச்சாய்ங்க அப்ப கூட அது அங்க சுத்திகிட்டு தான் இருந்துச்சு.

‘கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் நீலமும் வானமுமாதான் இருக்குது, சொல்ற மாறி ஒன்னும் காண கிடைக்கல….
இத பாக்கவ இம்புட்டு கூட்டமுனு’ இராமன் தான் செஞ்ச பாவத்த தொலைச்ச இடத்த பாக்க வந்தவன் உரக்க சொல்லி ராக்காயி கடையாண்ட இருந்த கல் அணைகட்டுல உக்காந்தான்.

“இங்காருங்கயா! என்ன இப்படி சொல்லிபுட்டிங்க, பொத்தாம் பொதுவா  பேசாதிங்கயா இந்த மண்ணு எத்தனை பேர வாழ வச்ச மண்ணு தெரியுங்களா! இந்த மண்ணு எங்க உசுரு மாறியா அப்படி பொசுக்குனு வார்த்தைய விடாதிக.

ஒரு காலத்துல இந்த கடலும் மண்ணும் அவ்வளவு பரபரனு இருக்கும் பாக்கவே கோடி கண்ணு வேணும்…
ம்ம் யாரு கண்பட்டுச்சோ இன்னைக்கு இப்படி கிடக்கு.

நீங்களா படிச்சவுக உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்ல ம்ம்” சொல்லிபுட்டு பதமா சோத்த வடிச்சிட்டு இருந்தா ராக்காயி.

“அட கோச்சுக்காதிங்கமா! நான் பார்த்தத சொன்னேன் அம்புட்டு தான் தப்பா நினைச்சுகாதிங்க….

நல்ல சில்லுனு ஒரு சர்பத் போடுங்க தாகமா இருக்கு”

“சோறு திங்கிற வேளையில சர்பத் கேக்குறீகளே இந்த பத்து நிமிசம் பொறுத்தீகனா மீன் சோறே சாப்டலாம்”

“குடியே கெட்டுச்சு போ! ஆத்தா நான் சுத்த சைவம் என்கிட்ட மீன் சாப்பாட பத்தி சொல்றீகளே”

“அடி ஆத்தி மன்னிச்சுகக! சைவ சாப்பாடு இன்னைக்கு கிடைக்குமானு தெரிலீங்களேனு”…. சொல்லிபுட்டு கத்துனா ரக்காயி.

“அடியேய்ய்ய்ய் பொட்டுகண்ணி! அங்க என்ன சைவ சாப்பாடா??” அங்கயும் இல்லயுனு கையசவுல தெரிஞ்சுகிட்டா.

“சொல்றேனேனு தப்பா நினைக்காதிக இந்த மீன் சோறு திங்களயேனு ரொம்ப வருத்தபடுவீக பாருங்க” னு சொல்லி சிரிச்சா, அந்த சிரிப்புல தான் எவ்வளவு வெகுளி. தூக்கிகட்டுன நீலசீலையும் அதுக்கு பொருந்தாத சாக்கெட்டும் பரட்டை தலைனு அவ மொத்த தேகத்துலயும் இரண்டே விசயம் தான் வெள்ளை ஒன்னு அவ சிரிக்க அப்ப தெரியுற பல்லும் இன்னொன்னு அவ வெள்ளந்தி மனசும் தான்.

“அது கிடக்கட்டும்! சர்க்காரே உதவாத இந்த ஊருல கூறைய போட்டு இருக்கிங்களே இதலாம் சகிசிட்டு இங்க கிடக்கனுமா? அத சொல்லுங்க”னு பரிதாபமா தான் கேட்டான் அந்த ஆசாமி.

“ஏய்யா பிள்ளைய பெத்துபோட்டாமேனு எவளாச்சும் சுமந்தத அறுத்து போட்டுருவாளா

இங்க வாழவே வக்கில்லனாலும் எதுவுமே கிடைக்கலனாலும் இங்க இருக்குற மனுச மக்க கட்டை இந்த உப்புகாத்துல தான் கலக்கும்.

நாங்க போறதா இருந்த அம்பது வருசத்துக்கு முன்னாடியே போயிருக்க மாட்டோமா! இது எங்க மண்ணுயா அத எந்த கொம்பனும் தடுக்க முடியாது அது எங்க அழிஞ்சாலும் சரி”

“ஒ அது நடந்தப்ப நீங்க இங்க இருந்திகளா!”

“ஆமாங்கய்யா! ஆமா இங்க தான் கிடந்தேன்

அப்ப எனக்கு ஏழு வயசிருக்கும்..

இந்தா! இந்த சர்சுல அன்னிக்கு ஏசப்பன் திருவிழா நடந்துட்டு கிடந்துச்சு ஊரே இங்க தான் இருந்துச்சு என்னிக்கும் இல்லாமா அன்னிக்குனு காத்து வெறசா அடிச்சுசு

அன்னிக்கு எங்க ஆத்தா சத்தத்த கேக்கனுமே ஏன் ஈர குலையே நடுங்கி போச்சு அவ அந்த மாறி கொந்தளிச்சு நான் பார்த்ததேயில்ல

அப்பவே தெரிஞ்சுச்சு என்னமோ நடக்க போதுனு ஊருகாரவுக எல்லோரும் கொஞ்சம் பதுசா பயந்து போய் தான் படுத்தோம்.

விடியகால ஒரு நாலு மணிக்கு இருக்கும் அப்படி ஒரு சத்தம் பேய் மழை புயலு நரியலாம் கத்துது அம்மா ஆத்தானு ஒரே கூச்சல் காதகிளிக்க அந்த நேரம் தான் ஆத்தா பொங்குனாஆஆஆ!!!!” சொல்லி ஒரு பெருமூச்சுவிட்டா ரக்காயி. அவ கண்ணுல தான் இன்னும் பீதி தெரியுது அந்த கிலி இன்னும் அவ கண்ணுல நிழலாடுது அன்னைக்கு நடந்தத இம்மி பிசகாம அப்படியே ஒப்புவிச்சா.

“அப்புறம் என்னமா ஆச்சு” ஆசாமிக்கு ஆர்வம் தாங்கல.

“சூரியன் வந்தப்ப தான் தெரிஞ்சுசு  நம்ம நடந்தது மணல்ல இல்ல என் மக்க தலையிலனு ஒரே பொண குவியலு எங்க சாதி சணம் எல்லா கிடந்துச்சு அப்புறம் ரொம்ப நாளா கடலுக்கும் போல எங்க தொழிலையும் பாக்கல அந்த சமயம் போட் மெயில் வேற கட்டிட்டு இருந்தாக புயல்ல அதும் அடிச்சிட்டு போக பின்ன நாங்க தான் போய் வேலை பார்த்தோம்

அப்ப தான் எங்க அய்யா கிட்ட சொன்னேன் பேசமா கடலுக்கு போறதவிட்டுபுட்டு இந்த கொலுத்து வேலைய பார்ப்போம்னு சட்டுனு கோபபட்டு எறிஉளில அடிச்சாப்ல அது தான் இந்த காயம்”னு சிரிச்சிட்டே நெத்தி தழும்ப காட்டுனா அதுலயும் அவ அழகு தான் உத்தம சோழன் பெண்சாதி மாறி.

இதலாம் கேட்டு தாகத்த மறந்தவனுக்கு மறுபடியும் நாவரண்டு போக மறுக்கா கேட்டான்.

“அம்மா சர்பத் கேட்டேன்ன்……

ஆமா உங்களுக்கு எத்தன புள்ளைக”

அவன் கேட்டத கொடுத்துபுட்டு “எனக்கு இரண்டு புள்ளைக ஒன்னு கடலுக்கு போயிருக்கு இன்னொன்னு பள்ளிகூடம் போயிருக்கு” சொல்லிபுட்டு கடலயே பார்த்தா….

உசரதுல இன்னும் அது சுத்திகிட்டு தான் கிடந்துச்சு.

பிறவு மண்சட்டில பேரிக்கா கணக்கா புளிய எடுத்து கரைகயில கண்ணம்மா வந்து எத கரைக்க போறாளோனு தூரத்துல அவளயே பார்த்து கரைச்சிட்டு இருந்தா ராக்காயி.

“என்னக்கா ஊரே அடங்கி கிடந்தாலும் நீ அசர மாட்டுறியே, ஊருகாரி கடைலலாம் கருவாடு குழம்பு கொதிக்கையில இங்க மட்டும் மீன் வாடை வீசுதே”

“அடி போடி! குசலக்காரி இத கேக்கதான் வந்தியாக்கும்”

“கடலுக்கு போனவுக இன்னும் வரல
நீ எங்க இருந்து வாங்கியாந்த”

“இன்னிக்கு மவன் வந்தாலும் வருவான் அதான் விடியகாலை வெறச சந்தைக்கு போய்ட்டு வாங்கியாந்தேன் அங்கயும் ஒன்னுமே இல்லடி

உளுவை தான் கிடந்துச்சு அத தான் அள்ளி போட்டு வந்தேன்” னு சொல்லி அரச்ச முளகாயில ஊற வச்ச மீன் துண்ட பதுவா எடுத்து போட்டு கொதிக்கவிட்டா ராக்காயி நெப்பும் நிழலுமா மிதந்துச்சு நெய்யில போட்ட தேன் மாறி.

ஒரு வழியா மதிய வேளை வர கூட்டம் அலைமோதுச்சு சோறு திங்க, ரக்காயி கடை மீன் குழம்பு வாடை எட்டுதிக்கு பரவ கூட்டம் கட்டி ஏறுச்சு. கூட்டத்துக்கு பந்தி வைக்கும் நேரம் படக்குனு எந்திரிச்சு ஓடுனா ராக்காயி அவ ஓட்டத்த பார்த்த கண்ணம்மா கனிச்சு பரிமாற தொடங்குனா.

“எங்கமா இந்தம்மா இப்படி ஒடுது” னு அந்த ஆசாமி பதறி போய் கேக்க அவ சிலுப்பாம சொன்னா.

“போட்டு சத்தம் கேக்குதுல மவன் வர்றானானு பாக்க போயிருக்கும்,

ம்ஹூம் நாலு நாளுக்கு முன்ன கடலுக்கு  போனவுகளாம் வந்துடாக அவ மவன் இன்னும் வரல

இன்னும் எந்த நம்பிக்கையில போய் பாக்குறோளோ ம்ம்”

“இது என்னமா போனவுங்க வந்து தான ஆகனும்”னு கேட்டவனுக்கு எப்படி பதில் சொல்லுவா.

இராவணன் ஆண்ட மண்ண கண் எட்டுனாப்லே பாக்கலாம்னும் அப்படி பார்த்தவுக திரும்பி வந்ததில்லனும்.

ஒரு சிரிப்ப மட்டும் விட்டுபுட்டு போனவ கிட்ட வெறசா ஓடி வந்தவன் கேட்டான் “ஏய் இரக்காயி எங்க!”

“இப்ப ஏன் இப்படி பதற என்னாச்சு”

“ஸ்கூலு பிள்ளைக மேல கவர்மன்ட் பஸ்சுகாரய்ங்க ஏத்திடாய்ங்க” அதான் எங்கனு சொல்லு. கடல கை காமிச்சு வழி காட்டுனா கண்ணம்மா.

அந்த கடல பார்த்தபடி தான் அவளும் நின்னுட்டு இருந்தா யாரயோ தேடி பார்த்துட்டு இருந்தா.

உலகம் பூரா ஓடுற இந்த உப்பு தண்ணியவே பேர் வச்சு பிரிச்ச பயலுக கடலுக்கு வேலி போட்டு தடுக்க மாட்டாய்ங்கள என்ன? இப்படி இந்த கெட்ட ஈன சாதி மனுஷக கிட்ட மாட்டிகிட்டு தனிமரமா அவளும் நிக்குறா அந்த கரையில. கண்ணுக்கு தெரிஞ்ச எதிரி வந்தா கடலுக்கு போன மவன் எறிஉளி கொண்டு எறிஞ்சிடுவான் இந்த பசியெனும் எதிரி வந்தா எத கொண்டி எறியனும்னு தேவன் சொல்லலியே நினைச்சு புலம்புனா.

மிதமா ஒரு உப்புக்காத்து அலையோட வந்துச்சு அவ கால நனச்சுச்சு அவ முகத்த வருடுச்சு நீல இறகோட. அவ கண்ணு ரெண்டும் ரங்க ரங்கமா சுத்துது அந்த கடல, அதுவும் தான். 

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

கொஞ்சம் போர் கொஞ்சம் காதல்

கொஞ்சம் போர் கொஞ்சம் காதல்

சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள் இரண்டும் அவள் இதழ்களின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் கண்களும் அவன் கண்களும் சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது. சுற்றி தன் தளபதிகள் வீரர்கள் நண்பர்கள் நலம்விரும்பிகள் பாதுகாவலர்கள் என யாரையும் அந்த காதல் ஜோடி கண்டுகொள்ளவில்லை. இரண்டு நிமிடங்கள் வரை நீடித்தது அந்த காதல் போர் முத்தம்.

சுமார் இருபத்தியெட்டு மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடிக்கு முன்.

அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது.
தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள்,  விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது அது ஒரு மூடர் கூட்டத்தின்  இரத்த வெறி கொண்ட ஆறாண்டு போர்  .

இன்னும் அந்த சத்தம் ஓயவில்லை, நேரம் சரியாக இருபத்தாறு மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடிக்கு பின் நகர்ந்து கொண்டிருந்தது .

மேசையில் அமர்ந்தபடி அங்கு நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்தாள் அவள். அது வரை அவள் அங்கு சுற்றி நடந்தவைகளை பொருட்படுத்தவில்லை சுற்றி இருப்பவர்களை பற்றியும் கவலை கொள்ளவில்லை. அவளின் பதினாறு ஆண்டு கால காதலுக்கு கிடைக்க போகும் பரிசை எண்ணி மட்டும் திக்குமுக்காடி போய் இருந்தாள்.

மெள்ள நகர்ந்து தன் அலமாரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு புகைப்படங்களும் ஒவ்வொரு கதைகள் சொல்லும். படம் பார்த்து கதை சொல் என்பதை போல அவள் மனம் அவளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தது. அவளும் அவனும் தன் செல்ல நாய்குட்டிகளுடன் எடுத்த புகைப்படங்கள், சூரிய குளியலின் போது கதிர்கள் சொட்ட எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவனை அனு அனுவாக ரசித்து அவளே படம் பிடித்த புகைப்படங்கள் என எத்தனை எத்தனை. அத்தனையும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். பொக்கிஷ குவியலில் ஒரு புகைப்படம் மட்டும் நனைந்து இருந்தது அது அவள் கண்களால் ஏற்பட்ட பிழையாக இருக்ககூடும். அந்த புகைப்படம் மெள்ள நினைவுகளால் சூழ்ந்து  மேலும் ஈரமாக்கியது.

சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. தன்னவனை முதல் முதலாக பார்த்த தருணம் அது. 

மெச்சுப்படிகளுக்கு கீழே தன் மாஸ்டரின் அருகில் அமர்ந்து கைகளை பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்த பொழுது. எந்த வித சலனமும் இன்றி கால் நோகாமல் மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த அந்த போர் வீரனை கண்டு அவள் அன்று சொக்கி தான் போனாள். வகிடெடுத்து வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் நெடி வீசும் நடை. அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆனால் அவளை அவன் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. ஏமாந்து போனாள். அவனை அவள் கண்கள் சுற்றி சுற்றி வந்தது. அப்போது அவளுக்கு பதினேழு வயது. காதல் அனுக்கள் கசிந்து மோனோமைன்களை கிளர்ச்சி அடைய செய்திருந்தது. அவன் சட்டை செய்யாமல் போனது அவளை என்னவோ உண்டு பண்ணியது அட்ரினலினுடன் செரொட்டோனின் துவந்த யுத்தம் நடத்தி கொண்டிருந்தது. வேகமாக வெளியே வந்தவள் தன் கைப்பையில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தாள். குபு குபு வென்று புகைத்து தள்ளினாள். ஆகா அவள் புகைக்கும் அழகை இரசித்து கொண்டே இருக்கலாம். தன் உதடுகளில் வைத்து வைத்து எடுத்தாள். சிரொடொளியின் பிம்பத்தில் அவன் தெரிந்தான். அவளை ஏற இறங்க பார்த்தான். அந்த பார்வைக்கான அர்த்தம் அவளுக்கு அன்று புலப்படவேயில்லை. மெள்ள சிரித்தாள். அவன் அந்த புன்னகைக்கு பதில் கூறாமலே அவ்விடம் விட்டு நகர்ந்தான். 

அன்றிரவு தன் தோழிகளிடம் அவனை இப்படி தான் குறிப்பிட்டாள் “ஜென்டில்மேன் வித் ஃப்ன்னி முஷ்டாக் ஹா ஹா”

அவன் ஓர் போர் வீரன், நூற்றுக்கணக்கான போர்களை பார்த்தவன் ஆயிரக்கணக்கான எதிரிகளை பார்த்தவன் லட்சக்கணக்கான பெண்களை பார்த்தவன். அதைவிட  காதல் தோல்வியை பார்த்தவன், முதல் காதலில் தோல்வியுற்றவன். அவனை அவ்வளவு எளிதாக அனுகிட முடியாது என அவளுக்கு தெரியும் ஆனால் அவள் வயதுக்கு தான் அது புரியாமல் போனது. 

அவன் மேலும் அவளை ஈர்த்தான் அது அவன் வசிகரமா அல்லது அவள் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அன்று முதல் அவனை பின் தொடர்வதையே வாடிக்கையாக்கி அவனை மனப்பதையே லட்சியமாக்கினாள். முதலில் நட்பாக தொடர்ந்தது அவர்களது உறவு. அத்தி பூத்த சந்திப்புகளின் போது இருவரும் பரஸ்பரம் தங்கள் மனதில் உள்ளதை மனம்விட்டுப் பேசுவார்கள். ஒரு முறை அவனுக்கு எழுதிய கடிதத்தில் “உங்களுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்தேன் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் நட்பு கிடைத்தது என் பாக்கியம். அடுத்து உங்களை எப்போது பார்ப்பேன் என மனம் ஏங்குகிறது”. பின்பு மாலை நேர சந்திப்புகள் அதிகமானது அந்த சந்திப்புகளில் காதல், ஆன்மிகம், வரலாறு, சினிமா, போர் ஆகிய  உரையாடல்கள் நிறைய கலந்திருந்தது. 

அவர்கள் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அவன் பெர்சனல் பக்கங்களை அவ்வப்போது ஆவலோடு கேட்டு தெரிந்து கொள்வாள் அப்படிதான் அவன் முதல் காதலை பற்றியும் அறிந்து கொண்டாள். இதில் என்ன ஒரு அற்புதம் என்றால் அவனை அவன் முன்னாள் காதலி பார்த்தும் அதே பதினேழு வயதில் தான், பதினேழு அவன் வாழ்க்கையை புரட்டி போட்டது. அவன் முன்னால் காதலி அவன் சொந்த சகோதரியின் மகள் அதனால் காதலில் விழுவதற்கு இருவருக்கும் பெரிதாக காரணம் ஏதும் தேவைபடவில்லை. இருவரும் பரஸ்பரம் தங்கள் காதலை பரிமாறி சரசம் கொண்டிருந்தார்கள். தன் தாயையே தள்ளி வைக்கும் அளவிற்கு அவன் மேல் பிரியம் கொண்டிருந்தாள். அவளுக்குகாக எதுவும் செய்ய துணிந்திருந்தான். ஆண்டுகள் பல கழிந்தன அவள், அவன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி போனாள். அவள் அவனையே மிஞ்சும் அளவிற்கு கட்டளைகளையும் அதிகாரங்களையும் வீசி எறிந்தாள். இரவு பகல் பாராது அவள் ஸ்பரிசத்தின் சூட்டிலேயே வாழ்ந்தான் அந்த போர் வீரன். அவன் போதை பொருள் எதுவும் கொண்டு இருந்ததில்லை ஏனென்றால் அவன் அவளை எப்போதும் தன்னுடன் கொண்டிருந்தான். 

அப்போது தான் அவர்கள் வாழ்வில் வில்லன் நுழைந்தான். நாட்கள் செல்ல செல்ல காதல் எல்லை கடந்தது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு தானே. அந்த காதலே அவர்கள் இருவருக்கும் எதிரியாக உருவெடுத்தது. அவன் காட்டும் காதல் அவளுக்கு காவலாகவும், சந்தேகமாகவும், அடக்குமுறையாகவும் அதிகாரமாகவும் தெரிந்தது. அவள் சுதந்திரம் பறிபோனதை போல உணர்ந்தாள். காதலில் அடைப்பட்ட பிறகு எப்படி விடுதலை கிடைக்கும். அந்த சிறுக்கிக்கு அது பிடிபடவில்லை. அவள் உள்ளம் சுதந்திரத்தை நாடியது. நாட்கள் சென்றன வேகமாக அவள் சுதந்திரம் முழுவதுமாக பறிபோனது. அவனுக்கோ காதல் அதிகமானது அவளிடம் தீர காதலில் திளைக்க மனம் ஏங்கியது. போர் தொழில் பழகிய கைகள் ரோஜா பூக்களை கொய்ததை கண்டு எதிரிகள் எள்ளி நகையாடினர். அவனை வீழ்த்த பல திட்டங்களை தீட்டினர். அவனோ போர் வீயூகங்களை மறந்து போனான். அவளுடன் இருந்த அந்த நாட்கள் இன்பத்தேனை அவன் வாழ்வில் அள்ளி தெளித்தது. அவை அனைத்தும் ஒரு நாள் விஷமாக மாறி தன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும் என்று அவன் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

விரக்தியும் வேதனையும் அவளை வாட்டி எடுத்தது அது அவளை எத்தனையோ முறை தற்கொலைக்கும் தூண்டியது. ஆனால் தன்னை மாய்த்துக் கொள்ளும் உரிமை கூட தனக்கு இல்லை என்று நினைத்து தான்  மேலும் வெதும்பி போனாள். துக்கம் தாளாமல் துடித்தாள், அவள் கோபமும் ஆத்திரமும் ஒரு நாள் எல்லை கடந்தது.

அன்று இருவருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் நடந்தது. அந்த உரையாடல் தங்கள் காதலை முடிவுக்கு கொண்டு வர போகிறதென்று இருவரும் அறியவில்லை. வார்த்தைகள் தடித்தன. அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை பாவம் அவளும் பெண் தானே எவ்வளவு தான் தாங்குவாள். தீர்க்கமாக முடிவெடுத்தாள், வாசல் வரை வெளியே சென்றவனை அழைத்து நான் சாகப் போகிறேன் என்றாள். அவன் அவளை திரும்பி பார்த்து புன்னகைத்தான். அவன் வெளிவந்த சிறிது நேரம் தான் தாமதம். ‘டிஷ்’ என்று பயங்கர சத்தம் மாளிகை முழுவதும். அவன் திரும்பி வந்து பார்த்த பொழுது தான் குடியிருப்பதாக நினைத்த இடத்தில் ஆழ் துளை. இரத்தம் வழிந்தோடி அவன் பூட்ஸை நனைத்தது. அதற்கும் சுதந்திரம் இல்லை அவன் காலோடு நின்று கொண்டது. 

அவளை அப்படி பார்க்க அவனால் முடியவில்லை. அவள் நினைவில் பல நாட்கள் அவள் கல்லறையில் சில நாட்கள் என நாட்களை கடத்தினான். கண்களில் கண்ணீர் கசிவதை உணர்ந்தவன் முழுவதுமாக அடக்கி கொண்டான் அந்த துக்கத்தையும் கோபத்தையும் தன் எதிரிகளிடம் காட்ட ஆயத்தமானான். 

போரை காதலிக்க தொடங்கினான் எதிரிகளை சரசம் கொள்ள நினைத்தான். போர் பிரகடனங்களே அவன் காதல் கடிதங்கள் ஆனது. எதிரிகளின் மரணங்களே அவன் காதல் பரிசுகள் ஆனது. எதிரிகளின் கதறல்கள் அவன் காதல் கவிதைகள் ஆனது. ஆயுத்தங்களும் போர் கருவிகளும் அவன் காதல்  அனைப்புகள் மற்றும் முத்தங்கள் ஆனது.

இப்படி ஒரு போர் வீரனை அவள் காதல் கொள்ள செய்வது மட்டுமல்லாமல் அவனை மனக்க வேண்டும் என்று சூளுரைப்பது அவள் சிறுபிள்ளைத்தனம். ஆனால் அவள் காதலை அளக்காமல் பொத்தாம் பொதுவாக அப்படி கூறி விடவும் முடியாது. இந்த பூமி வானத்தை உரச ஆசைப்படலாம் சூரியனை உரச ஆசைப்படலாமா!. அவன் முன்னாள் காதலியின் மறைவிற்கு அவளும் ஒரு காரணம் என அவள் காதுகள்படவே பேசிய வாய்கள் நிறைய. ஆனால் அவள் ஆசை கொண்டாள் யார் யாரோ என்னனவோ சொன்னார்கள் எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை. அவள் காதல் மயக்கத்தில் இருக்கிறாள் என்பதால் அல்ல அவள் தான் கொண்ட காதலில் தீர்க்கமாக இருப்பதால். தன் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் கூட அப்படி தான் எழுதியிருந்தாள் ‘நான் ஒரு மாமனிதனை பார்த்தேன், அவர் மீது காதல் வயப்பட்டேன் அவரை நான் திருமணம் செய்ய போகிறேன்’. அவன் மீது கொண்ட காதலில் அவ்வளவு தீர்க்கமாக இருந்தாள் என்பதை இந்த வரிகளே இந்த உலகிற்கு பறைசாற்றும் .

நாட்கள் சென்றன மாதங்கள் ஓடின வருடங்கள் பறந்தன. அவள் கனிப்பு சரியாக தான் இருந்தது. பார் போற்றும் போர் வீரனாக இருந்தாலும் அடிப்படையில் அவனும் சராசரி ஆண் தானே என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அது சரியாகவும் போய் தொலைந்தது. தன் முன்னாள் காதலியின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சரியான துணை அப்போது அவனுக்கு தேவைப்பட்டது . காதல் தோல்வியை கண்ட அனைவரும் செய்யும் பத்தாம் பசிலி தனம். காதல் போதையை கடந்த ஒரு தெய்வீக நிலை, அந்த போதையை அடைந்தவன் அதில் இருந்து வெளி வந்ததாக இன்று வரை சரித்திரம் இல்லை. அந்த போதையை மீண்டும் இவள் மூலம் கண்டான் . பேச்சில் இனிமையை கண்டான், உள்ளத்தில் அன்பை கண்டான், பார்வையில் அழகினை கண்டான், படுக்கையில் பேரன்பை கண்டான். ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் கலவி கொண்டதில்லை. காதலர்களுக்கு தேவையானதாக இருக்கலாம் ஆனால் காதலுக்கு அது எப்போதும் தேவையற்றது தான்.

அவன், அவள் மீது காதல் எப்போது கொண்டான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இருந்தாலும் அவளை எங்கு சென்றாலும் தன்னுடன் அழைத்து சென்றான்.  இவர்களுக்கிடையில் நெருக்கம் அதிகமாக, அவளை தன்னுடனே தங்க வைத்தான். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று இவர்களின் குடும்பத்தார்களுக்கு கூட ஓர் விடை தெரியாத கேள்வியாக இருந்தது.

எப்போதும் அவளை தனிமையில் தன்னுடன் வைத்திருக்கவே விரும்பினான். முதல் காதலில் செய்த அதே போக்கு இவளிடமும் தொடர்ந்தது. ஆனால் அது எதற்காக என்று அவள் நன்கு அறிந்திருந்தாள். வரலாற்றில், தான் ஒரு லௌகீக வாழ்க்கையில் இருப்பதை கண்டு எதிரிகள் ஆசுவாசப்படுத்தி கொள்வார்கள். அது தன்னை வீழ்த்துவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் எண்ணினான். அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட போர் வீரனுக்கு லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் இருந்ததை அவனே பல மேடைகளில் கண்டிருக்கிறான். தனக்கு ஒரு காதலி அல்லது மனைவி  இருப்பது அந்த பித்து பிடித்த இரசிகைகளுக்கும் பாமர மக்களுக்கும் தெரிந்தால், அவனுடைய அதிகாரங்கள் செல்லுபடியாகாது என்று நினைத்தான். அதுவும் ஒரு வகை அரசியல் சூட்சமம். தனக்கென யாரும் இல்லையென்று மக்கள் தங்கள் மனதில் பதித்துவிட்டால் தான் அவர்கள் வீட்டில் ஒருவனாக மாறிவிடலாம் என்ற சாணக்கிய தந்திரம் தான் அது. 

எதுவானாலும் அவள் அன்பு அவனை ஓர் ஆத்மார்த்தமான காதலன் ஆக்கியது. எத்தனை அடக்குமுறைகளையும் அதிகாரங்களையும் அவள் மீது செல்லுத்தினாலும் அவள் அதை அன்புடன் கையாண்டாள். ஒருகட்டத்தில் அவளை இப்படி தான் உருவகபடுத்தி வைத்திருந்தான். ‘அவள் என்னிடம் அடங்கி ஒடுங்கி என் காலடியில் கிடப்பது என் மீது கொண்ட பயத்தினால் அல்ல என் மீது கொண்ட அளவற்ற காதலினால்’. 

அதனால் தான் புகையையும் மதுவையும் அரவே வெறுக்கும் அவன் கேப்ஸ்டன் சிகரட்டுகளை அவள் விரல்களில் தவழ உதடுகள் புகைக்கும் பொழுது அதை வெகுவாக இரசித்தான். அவளையும் கூடத்தான், அவளை அவன் ரசிக்காத நாளே கிடையாது அதிலும் அவள் பாப் கட் ஹேர் ஸ்டைல், வட்ட முகம் அதை தாங்கி நிற்கும் புன்னகை, குட்டை பாவாடை, சாயம் பட்ட உதடுகள், சூரிய குளியல்கள் கண்ட சிவந்த மேனி என கண்களை கொள்ளையடிக்கும் அளவிற்கு கொள்ளை அழகு அதை கண் கொட்டாமல் ரசித்து கொண்டே இருப்பான்.

ஆனால் அந்த அழகும் சில நேரங்களில் அவனுக்கு ஆபத்தாகி போனது. அது அவன் வாங்கி வந்த சாபமா அல்லது அவன் காதலிகள் பெற்ற வரமா என்று தெரியவில்லை. அவளும் இரண்டு முறை அவனால் தற்கொலைக்கு தூண்டப்பட்டாள். 

அன்று அவன், அவளை கண்டு கொள்ளவில்லை போர் வேலைகளில் மும்முரமாக இருந்தான். எதிரிகளை பழிதீர்க்கும் தலையாய கடமையை செய்து கொண்டிருந்தான். போரை காதலிக்க தொடங்கியவனை தன் பக்கம் திருப்ப அவன் முன்னாள் காதலி செய்ததை போலவே தன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தன் நெஞ்சில் வைத்து சுட்டுக் கொண்டாள். அவர்கள் காதல் செய்த புண்ணியமா என்று தெரியவில்லை உயிர் பிழைத்தாள். அது தான் அவளுக்கு முதல் அனுபவம். தற்கொலை பழகி போனதா என்று தெரியவில்லை மீண்டும் ஒரு முறை அதை பரிட்சயித்து பார்த்தாள். இந்த முறை அது காதல் கவன ஈர்ப்பு போராட்டமாக இருந்தது. போர் சூழல் காரணமாக வீட்டிற்கு வாராமல் தன் சக பெண் வீராங்கனைகளுடன் சுற்றி திரிந்ததால் மூன்று மாதங்கள் அவளை காண அவன் வரவில்லை. முப்பத்தைந்து தூக்க மாத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு அவன் வரவிற்காக காத்திருந்தாள். அவன் வராமல் போயிருந்தால் அன்றே அந்த காதலி வரலாற்றில் இடம் பெற்றிறுப்பாள். ஆனால் வைராக்கியம் கொண்ட காதல் கிறுக்கி ஆயிற்றே அவனை மனக்காமல் இந்த உயிர் உடம்பை விட்டு போகாது என்று உயிரை கையில் பிடித்து வைத்திருந்தாள். அது தான் அவளுக்கு இரண்டாவது அனுபவம். இன்று இது மூன்றாவது முறை.

நினைவுகளின் அசைவில் அந்த நனைந்த புகைப்படத்தை எடுத்து முத்தமிட்டாள். சிறிது நேரம் அவள் நெஞ்சாங்கூட்டில் வைத்து அனைத்து கொண்டாள். இரண்டு முறை தோற்றாலும் மூன்றாம் முறை தோற்கமாட்டேன் என கர்வம் கொண்டாளா என தெரியவில்லை. முகம் முழுவதும் அப்படி ஒரு பிரகாசம்.

அன்று போர் உச்சத்தை அடைந்திருந்தது. குண்டுகள் மழை பொழிந்த வண்ணம் இருந்தன. அவள் அருகே வந்தவன் கையில் இருந்த புகைப்படத்தை கீழே வைத்து விட்டு 

“அவ்வளவு தான் எல்லாம் முடிந்துவிட்டது. நீ தப்பித்து சென்று விடு. இங்கே இனி இழக்க ஒன்றுமில்லை.” என்றான் அந்த போர் நாயகன். 

உலகநாடுகளின் கண்களுக்கு சிம்மசொப்பனமாய் இருந்தவன் இன்று தழுதழுத்த குரலில் அவளுக்கு கட்டளையிட்டான்.

அவள் அவனருகே வந்து காதுகளில் கிசுகிசுத்தாள். 

“உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டேன்”

தன் வாழ்நாளில் முதன் முதலாக கண்களில் கண்ணீரை தவழவிட்டான். இது வரை எத்தனை எத்தனையோ துன்பங்கள் நேர்ந்த போதிலும் கல்லாக இருந்தவன் இன்று காதல் கடலில் கரைந்து ஓடுகிறான். அந்த கண்ணீர் துளிகள் யாவும் அவளுக்காக அவன் சேமித்து வைத்த காதல் துளிகள்.

அவள் காதலுக்கு முன் தன் காதல் எந்த விதத்திலும் சளைத்தல்ல என்று நிரூப்பிக்க கூட அவன் அன்று அதை செய்திருக்கலாம். ஆம் யாரும் எதிர்பாராத அந்த காரியத்தை செய்தான். அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தவன் தன் வரலாற்றில் நிகழாத ஒன்றை நிகழ்த்திக் காட்டினான். அவளை மெள்ள நெருங்கி அவள் ஸ்பரிசத்தை தன் சூட்டினாள் நனைத்து இறுக அனைத்து அவள் மூச்சை நிறுத்தும் வண்ணம், சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுக்க சால்சாச் நதி வெள்ள பெருக்கெடுக்க. கண்கள் நான்கும் சல்லாப்பித்து கொள்ள. இதழில் காதல் கசிய. சுற்றி தன் போர்தளபதிகள் வீரர்கள் நண்பர்கள் நலம்விரும்பிகள் பாதுகாவலர்கள் என யாரையும் பார்க்காமல் ஓர் நீண்ட நெடிய காதல் போர் முத்தத்தை கொடுத்தான்.

அவன் எழுதிய அந்த கடைசி குறிப்பில் இப்படியாக குறிப்பிட்டிருந்தான் ‘நான் இப்போது, இந்த மண்ணை விட்டு பிரியும் தருணத்தில், அவளை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளேன், பல ஆண்டுகால நட்பிற்குப் பிறகு, என்னுடைய தலைவிதியை என்னுடன் பகிர்ந்து கொள்ள கிட்டத்தட்ட எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட இந்த போர் வீரனை மனந்து மரணத்திலும் என்னுடன் என் மனைவியாக சேர வேண்டும் என்பதுவே அவளுடைய விருப்பம். அதை நான் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.’

 இதுவரை அவளுக்கென்று அவன் எதுவும் செய்ததில்லை. அவள் காதலுக்கு அவன் தகுதியானவனா என்று கூட அவன் அவ்வப்போது நினைத்ததுண்டு ஆனால் இன்று அவள் காதலுக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க தயாரானான்.

இதோ திருமண ஏற்பாடுகள் தடைபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. அவள் சூளுரை இன்று நிறைவேற போகிறது. அவளுக்கு அப்போது வயது முப்பத்தி மூன்று அவனுக்கோ ஐம்பத்தி ஆறு எவ்வளவு வயது இருந்தால் என்ன. காதலுக்கு கண்கள் கிடையாது மொழி கிடையாது மதம் கிடையாது தேசம் கிடையாது இனம் கிடையாது இல்லை அது இருக்கக்கூடும் யார் கண்டார். 

 யாரும் அறியாத ஆள் அரவமற்ற இரகசிய மாளிகையின் பாதாள அறையில் மகா சாம்ராஜ்யத்தின் நாயகன் தன்னிகரில்லா போர் தலைவன் இராஜ போர் உடையில் வீற்றிருக்க, இராஜ விருந்து காத்திருக்க, பட்டத்து இராணி கருப்பு கவுனை அணிந்து வர, சிவப்பு ரோஜாக்களின் இசை கமழ, நண்பர்கள், வீரர்கள் புடைசூழ திருமண ஒப்புதலில் இருவரும் கையெழுத்திட்டனர். 

அவளுக்கு அப்படி ஒரு பேரானந்தம் அவள் கால்கள் தரைகளில் இல்லை பிறந்த பலனை அடைந்த களிப்பில் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

அவள் வழக்கம்போல தன் பெயரை தன் குடும்ப பெயருடன் எழுத அதை பார்த்து அவன் புன்னகைத்தான். அவனை மெல்ல தன் தோள்களில் இடித்து அந்த பெயரை அடித்து தன் பெயருடன் தன்னவன் பெயரையும் கையெழுத்திட்டு தன்னவனை கரம்பற்றினாள் அந்த காதல் சண்டாளி.

அவன் முதன் முதலில் அவளை நேரில் சந்தித்தபோது, கேட்ட கேள்வி ஒன்று அவனுக்கு இன்றும் நினைவிருக்கிறது. அதை அவள் இன்றும் தொடர்ந்து செய்வது தான் அவள் காதல் சூத்திரமே. அந்த கேள்வியை மறுபடியும் கேட்க ஆசைபட்டான் அந்த போர் நாயகன்

 “ஏன் இப்படி விழுங்குவது போல பார்க்கிறாய்? ” 

அன்று எப்படி அவளுக்கு தலை கால் புரியவில்லையோ இன்றும் அதே உணர்வு. மெல்ல சிரித்தவள் மீண்டும் அவனை விழுங்க தொடங்கினாள்.

காதலிலும் போரிலும் கருணையை எதிர்பார்க்க கூடாது என்பது இராஜ நியதி. அது பொய்த்து போகும் அளவிற்கு மிக பெரிய பொய்யாக இருக்க கூடும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அதை மெய்பிக்க இந்த காதல் ஜோடிகள் முடிவெடுத்தனர். எதிரிகளின் கருணை தங்களுக்கு தேவையில்லை என உறுதியாக இருந்தார்கள். இராமயண போரில் இராமனின் கருணையை இராவணன் எதிர்பார்க்கவில்லை. இராமனும் அவனுக்கு கருணை வழங்க சித்தமில்லை. 

அவன் அசுரர்களை கொல்லும் இராவணனும் இல்லை, தேவர்களை காக்கும் இராமனுமில்லை. அவன் இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் ஆச்சரியம்.

அவன் சந்தித்த போர்களிலயே மிக கொடுமையான போரும் இது தான் கொண்ட காதலிலே மிக இனிமையான காதலும் இது தான். அதை இவ்வளவு சீக்கிரம் இழக்கிறோம் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

தேனீர் கோப்பையை ஏந்தியவாறு தன் சகாக்களிடம் தன் கடைசி உரையாடல்களை நிகழ்த்தி கொண்டிருந்தான். ‘இப்போது கூட ஒன்றுமில்லை தப்பித்து விடலாம்’ என்று கூறியவனை. சிரித்துக் கொண்டே முதுகில் தட்டிக் கொடுத்து 

“நான் கோழை என்று நினைத்துவிட்டாயா? 

எல்லாம் இழந்து போர்களத்தில் நிராயுதபாணியாக நின்ற பிறகு பயந்தோடி வாழ்ந்து வயதாகி சாவாது யாருக்கு என்ன லாபம். 

அவளுக்காகவா?”

தேனீர் கோப்பையை உயர்த்தியவாரே அவளை கைகாட்டினான். அவள் சிரித்துக்கொண்டே மதுக்கோப்பையே முத்தமிட்டு கொண்டிருந்தாள். 

“ம் லட்சியத்தை நோக்கிய கனவு தகர்ந்த பிறகு அதை நினைத்து எதிரியிடம் போராடி அவனிடம் வீர மரணம் அடைய எனக்கு விருப்பமில்லை. 

இந்த பயணம் இதோடு நிற்கபோகிறது நான் ஆரம்பித்த பயணத்தை நான் முடிப்பது தான் சரி. 

ஒரு காரியத்தை செய்வதற்கு முன் எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம் ஆனால் முடிவை எடுத்த பிறகு அதற்கு…” சிரித்துக் கொண்டே சகாக்களை இறுக அணைத்துக் கொண்டான்.

அவள் என்றோ எழுதியதை இன்று அவள் நிறைவேற்ற காத்திருக்கிறாள்.
அவனை முதன்முதலாக சந்தித்த போது அவள் டைரியில் இப்படி தான் எழுதியிருந்தாள்.

‘நீ எங்கு சென்றாலும் நான் உன்னை பின் தொடர்ந்து வருவேன். அது உன் இறப்பாக இருந்தாலும் சரி’.

அங்கு திரண்டிருந்த அனைவர் முன்னிலையிலும் தன் ஆசை காதலியின் கையை பற்றி முத்தமிட்டான். அந்த பாதாள மாளிகையின் உள் அறைக்கு சென்றான். திரைச்சீலை வேகமாக அவர்களை அள்ளி அணைத்து கொண்டது.

அந்த திரைச்சீலைகுள் நடந்த உரையாடல் இந்த உலகிற்கு தெரிந்திருந்தால் இப்படிபட்ட காதலர்களை அப்படி செய்திருக்க விட்டிருக்காது விதி யாரைவிட்டது. சேராத காதல் தான் சொர்க்கத்தில் சேரும் என்று யாரோ சொல்லி போனார்கள் அது எவ்வளவு உண்மை. சேராத காதல் தான் காவியமாகும் கவிபாடும் இந்த காதலும் ஒரு காவியம் தான் அது நிச்சயம் வரலாற்றில் பல கவிதைகளை பாடும். 
‘நான் ஏன் போர் வீரன் ஆனேன் 
நான் ஏன் கோபம் கொண்டேன்
நான் ஏன் வன்மம் கொண்டேன்
நான் ஏன் குரோதம் கொண்டேன்
நான் ஏன் காதலையும் கொண்டேன். 

கொடுமைக்கார தந்தையின் வயிற்றில்  பிறந்தேன். இந்த உலகத்தில் எதனாலும் ஈடு செய்ய முடியாத தாயின் அன்பை இழந்தேன். இருந்த ஓரிரு நண்பர்களையும் பிரிந்தேன். நான் பிறந்து வளர்ந்த சாலைகளில் ஒரு துண்டு பிரட்டுக்காக பசியில் வாடினேன். மாலை நேரங்களில் சோற்றுக்காக இரயில் நிலையங்களில் ஓவியங்களை விற்றேன். ஹூம். வாழ்க்கையில் திரும்பிய பக்கம் எல்லாம் தோல்வி தோல்வி. தோல்வியே நான் விரும்பி அணியும் உடையாகிபோனது. வாழ்க்கையை தொடர்வதே அர்த்தமற்றது  என்றிருந்தேன். வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று நினைத்த போது தான் இந்த மண் எனக்கு எல்லாம் கொடுத்தது. இந்த மண்ணுக்கு நான் நிறைய கடமைபட்டிருக்கிறேன் அந்த கடமையை நிறைவேற்ற தான் லட்சியம் கொண்டேன். இராணுவத்தில் சேர்ந்தேன் யார் யாரையோ எதிரியாக நினைத்து அழித்தேன். 

ஹா ஹா ஹா…

ஹும்

அன்று நுண்கலைக்கழகத்தில் சென்று ஓவிய கலை பட்டம் பெற ஆசைப்பட்டவனை இந்த உலகம் அடித்து உதைத்து தடுக்காமல் இருந்திருந்தால்….

உன்னை நான் அன்றே சந்தித்திருந்தால்…

ஹா ஹா ஹா…

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருந்திருக்கும்.” என்று ஜன்னலின் வழியே குண்டு மழை பொழிந்த வானத்தை பார்த்து கொண்டு அவளிடம் கேட்ட அந்த கேள்விகளுக்கு அவளிடம் பதில்கள் இல்லை. விடையில்லாமல் கேள்விகள் எப்போதும் பிறப்பதில்லை. அந்த கேள்விகளுக்கு அவள் பதில் கூறவில்லை என்றாலும் காலம் பதில் சொல்லும்.
முப்பது மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடியை கடந்திருந்தது. மதியவேளை என  கதிரவனும் நிரூபித்தான். ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது. அவன் நீண்ட பெருமூச்சு விட்டபடி அவள் அருகே வந்து அமர்ந்தான். தொண்டை குழியில் எச்சிலை விழுங்கி கொண்டு அவனை பார்த்தாள். சயனைடு குப்பிகள் அவள் உள்ளங்கைகளை முத்தமிட்டு கொண்டிருந்தது. தோட்டாக்கள் அவன் தூப்பாக்கியினுள்ளே இருந்து புடைத்து வெளி வர துடித்திருந்தது. காதல் ஜோதியை பற்ற வைக்க காலம் காத்திருந்தது. அவன் கன்னசைவின் கட்டளைக்காக காத்திருந்தாள். காதல் சாசனம் வெகு சீக்கிரமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

தன் பதினேழு ஆண்டு கால தோழி பதினான்கு ஆண்டு கால காதலி நாற்பது மணி நேர மனைவி தன் கண் முன்னே சாகபோவதை அவன் எப்படி பொருத்துக் கொள்வான். கண்களை மூடிக் கொண்டு தூப்பாக்கியை வலது நெற்றி பொட்டில் வைத்து காத்திருந்தான். அவள் சரிந்து விழும் சத்தம் கேட்டது மதுக்கோப்பை ரோஜாவின் மேல் விழுந்து நனைத்து கொண்டிருந்தது. ‘டப்’ என்று அந்த காதல் சத்தம் ஏனோ அது இந்த உலகிற்கு கேட்கவில்லை. கேட்க மறுத்ததா அல்லது மறைத்ததா என்று தெரியவில்லை. 

அவர்கள் உடல்கள் உடனே அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. தீயினை கொண்டு அந்த காதலை சாம்பலாக்கினார்கள். பின்பு அந்த காதல் ஆழ புதைந்து அடுங்கி ஒடுங்கி அமைதியானது இன்னும் சில காதல் துகள்கள் மட்டும் காற்றில் கலந்து காதல் விதைகளை தூவிச் சென்றது. 

சித்திரை திங்களில் சூரிய உதயத்திற்கு பின் வெளியான அன்றைய நாளிதழ்களில் இப்படியாக எழுதியிருந்தது ‘இறந்துவிட்டான்’. ம்ஹூம் ஆனால் அது ஒரு வரலாற்றுப் பிழை. அவர்கள் இப்படி தான் எழுதியிருக்க வேண்டும் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த காதலன் ‘அடோல்ப் ஹிட்லர்’ தன் காதலி  ‘இவா பிரான்’ னுடன் மன்னிக்க ‘இவா ஹிட்லர்’ உடன் காதலில் கரைந்துவிட்டான் என்று.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

வெண்தழல் தூரிகை

வெண்தழல் தூரிகை

கானல் பனி மெல்லிய அளவில் விழுந்த நேரமது. நடு சாமம் இரண்டு மணி இருக்கும் குளிரில் கடிகார முட்கள் கூட நடுங்கியது அப்போது தான் மதனின் அலைப்பேசி அலறியது. தூக்க கலக்கத்துடன் அலைபேசியை அனைத்தான் மீண்டும் ஒலித்தது இந்தமுறை எடுத்தான். எதிர் அலையில் ஓர் மென்மையான பெண் குரல்.

“மதன் ரெடியா இரு, 5 மணிக்கு நம்ம கிளம்புறோம் சரியா!

நமக்கு தேவையான பணம் எல்லாம் எடுத்துக்கிட்டேன்.” என தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உறக்கத்தை கலைத்து மணியை பார்த்தான்‌ இரண்டு ஆறை தழுவி கொண்டிருந்தது. வேகமாக அலைபேசியை பார்த்தான் அப்போது தான் தெரிந்தது அது பிரம்மகலை என்று, மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

“ஏய் என்னடி சொல்ற அஞ்சு மணிக்கு எங்க போற”

“டேய் ஊர விட்டு ஓடி போக போறோம்ல”

“எதுக்கு…”

“அதலாம் காலையில பேசிக்குவோம்.
நீ அஞ்சு மணிக்கு ரெடியா பி பிளாக் மாடில நில்லு. நானும் வந்துரேன் சேர்ந்து ஓடி போவோம்”

“ஏய் போறது தான் போறோம்!
நல்ல தூங்கி எந்திருச்சிட்டு டிபன் சாப்பிட்டு மெதுவா போவோம்”

“அதலாம் முடியாது சொன்னத செய்”

இணைப்பு துண்டிக்கப்பட்டது இருந்தும் அவன் ஏலம் விட்டுக்கொண்டே இருந்தான் அவள் பெயரை.

சூரியன் துயில் எழ காத்திருந்தான். சொன்னதை போலவே மார்கழி பனியின் குளிரையும் பொருட்படுத்தாமல் தாழ்வாரத்தின் இடுக்குகளில் காத்திருந்தாள். பின்பு ஏதோ ஒரு சப்தத்தை கேட்க நேர்ந்தாள். அதை கேட்ட மாத்திரமே ‘ மதன்’ ‘மதன்’ என்று கூக்குரலிட்டாள். ஆனால் சப்தமோ நிசப்தாமாகி இருந்தது.
திடிரென சில்லென்ற குளிரில் வெப்ப மூச்சு காற்று அவள் மேல் வீசியது. அப்படியே அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அந்த மெல்லிய இருளில் யாரோ பின் தொடர்வதை உணர்ந்தாள். அலைப்பேசியை எடுத்து மதனை அலைக்க முற்பட்டாள். பாதகத்தி அதையும் இருளில் தவறவிட்டாள்‌‌. திசை தெரியாமல் தாழ்வாரத்தையே சுற்றி திரிந்தாள். தூரத்தில் ஒரு வெளிச்சம் வந்து வந்து சென்றது. அது மதனாக தான் இருக்கும் என அவள் அன்னிச்சைகள் கூறியது. நேரே சென்று பார்த்தால் அது மெச்சுப் படிகளின் சுவரோரம் பொருத்தப்பட்டிருந்த எடிசனின் படைப்பு. அந்த வெளிச்சத்தில் அவள் மனம் வெளிரி போனது. வெளிச்சம் மெல்ல வெளியே படர இது தான் தக்க தருணம் என கைப்பேசியை துலாவினாள், கண்டுபிடித்தேன் என ஓடினாள் அருகே சென்றவள் பேரதிர்ச்சியில் உறைந்தாள். கைப்பேசி அருகே மதன் கிடத்தப்பட்டதை கண்ட கலைக்கு மயக்கமே பிரசவமாயிற்று. அவனை மெல்ல அனைத்து கன்னங்களை தட்டினாள் ம்ஹூம் எழவில்லை. ‘என்னடா ஆச்சு! எந்திரிடா” என சொல்லிக்கொண்டே என்னவோ முயற்சி செய்தாள். எதுவும் கதைக்கு ஆகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுத அவளுக்கு மணியின் ஞாபகம் வந்தது.

அலைப்பேசியை எடுத்து அழைத்தாள், தொண்டையில் வார்த்தைகள் கவ்வ நடந்ததை கூறினாள். மணியும் அதிர்ச்சியுடன் “என்ன சொல்ற ! இரு வரேன்” என்று கிளம்பினான்.

மணிக்கும் சற்று குழப்பம் என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என பதறியடித்து தாழ்வாரத்தின் அருகே வந்தான். மதனை பார்த்த மாத்திரத்தில் “நண்பா !! என்னடா டேய்..” என கதறினான். கலையும் கலையிழந்து நிற்க நேரம் ஐந்தை நெருங்கியது. அப்போது சட்டென யோசித்தவன் அவன் மூக்கின் அருகே விரல்களை வைத்தான்‌. திடுக்கிட்டு பின்னே நகர்ந்தான் மூச்சின் சூடு அவன் விரல்களை தகிக்கவில்லை. நிறுத்தி நிதானமாகவே சொன்னான் மணி “மதன் செத்துட்டான்”. அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். அவள் இறந்த சேதி கேட்டு சிந்திய கண்ணீரின் அளவு கோளில் மதனுக்கு சற்று அதிகம்.

ஆம்! காதலுக்காக காதலர்கள் சிந்திய கண்ணீரை சேமித்திருந்தால் இன்னும் ஒரு இந்துமா சமுத்திரத்தையே கண்டிருக்கும் இந்த பிரபஞ்சம். நல்ல வேளை வற்றாத ஜீவநதியாக காதலர்களுக்குள்ளே ஓடும்படி செய்துவிட்டான். பெற்றோருக்காக சிந்திய கண்ணீர் துளிகளை விட காதலுக்காக சிந்திய காதல் துளிகள் அதிகம்.

கண்ணீர் வரத்தின்றி நின்ற அவளுக்கு ஆறுதல் மொழி கூறினான் மணி. “இத நான் பாத்துக்குரேன் ! நீ யாருக்கும் தெரியாம போய்ரு … அப்பாக்கு எது தெரியாம கப் சிப்னு படுத்துக்கோ.”

அவளுக்குகோ மனம் கேட்கவில்லை, எப்படி கேட்கும் ! உருகி உருகி காதலித்த காதலன் காதலில் திளைத்து கிடப்பதை பார்த்த கண்களில் பேச்சும் மூச்சும் இன்றி கிடப்பதை பார்த்து எப்படி கேட்கும்.

ஆண்களுக்கு காதலில் விழ நான்கு நொடிகள் போதுமாம் ஆனால் பெண்கள் காதலில் விழ யுகம் கூட ஆகுமாம். ஆம் ! தத்துவ ஞானிகள் மற்றும் உளவியல் பேரறிஞர்கள் கூறுவது போல எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் போல பெண்களின் காதல் அழகு பார்க்கும், நிறம் பார்க்கும், பணம் பார்க்கும், குணம் பார்க்கும் அதன் ஆழம் பார்க்கும். அப்படி ஏதும் பாராமல் நொடி பொழுதில் அவன் வசம் விழுந்தவள் அவள் ஏழேழு ஜென்மங்கள் வாழ கனவுகள் பல கண்டவள் அவன் நிலையை கண்டு மலை முகடுகளின் நிலவும் மழை புழுக்கத்தை போல புழுங்கினாள். அவளை கண்டு நமக்கு சிரிக்க தான் தோன்றும் ஏனென்றால் அவள் இந்த நூற்றாண்டின் புதுமை பெண், ‘என் மகள் காசிக்கு ஓடிப்போய் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் !” என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று கூறிய பாரதியின் புதுமை பெண் ஆனால் பாரதி
இப்போது இருந்துதிருந்தால் அவளுக்காக அவனும் கண்ணீர் சிந்தியிருப்பான்.

ஆம் கண்ணீர் தான் சிந்தியிருப்பான். உங்களுக்கு தெரியாத ஒன்று யானும் பாரதியும் மட்டும் அறிந்த ஒன்று அந்த அவளின் நெகிழ்வான தருணங்களை நினைத்து கண்ணீர் சிந்தியிருப்பான்.

ஆம் கண்ணீர் தான் சிந்தியிருப்பான்.‌
உங்களுக்கு தெரியாத ஒன்று யானும் பாரதியும் மட்டும் அறிந்த ஒன்று அந்த அவளின் நெகிழ்வான தருணங்களை நினைத்து கண்ணீர் சிந்தியிருப்பான்.

இது எப்படி நிகழ்ந்தது என்று அவளுக்கு கடுகளவு கூட யோசனை இல்லை. அவள் சிந்தனை முழுவதும் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு அங்கும் இங்கும் அலைப்பாய்ந்தது. மணியும் கலையும் உடனை அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

மெல்ல நகரும் வேளையில் தான் அந்த சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று வெகுவாக விளங்கவில்லை. ஆனால் தாமதிக்காமல் கலை அவ்விடம் ஓடினாள். மணி அவளை பின் தொடர அவனுக்கு அங்கு அவகாசம் ஏதும் இல்லை.

சட்டென ஒரு கதறல் ‘மணி! மணி..’ என்று. மணியும் விரைந்து வந்தான்.

“என்ன கலை? என்னாச்சு!”

அவள் முகத்தில் பயம் கவ்வியிருந்தது. தொண்டை குழியில் எச்சில் விழுங்க எத்தனித்த குரலில் “மதன் பாடிய காணோம்!

“ஏய் என்ன சொல்ற…” என்றவாறே அருகில் சென்ற மணிக்கும் கதிகலங்கியது.

“இங்க எதோ தப்பா இருக்கு! உடனே நம்ம இங்க இருந்து போனும் “.

கலையும் அவனை ஆமோதித்தாள்.

ஆளில்லா தாழ்வாரம் பனி விழும் இரவு, யார் என்ன செய்தார்கள், என்ன நடந்திருக்கும் என இருவரும் குழப்பத்துடனே அங்கிருந்து சென்றனர்.

யார் அந்த மதன்? கலைக்கும் அவனுக்கும் என்ன உறவு இவர்கள் இடையே உளவும் மணி யார் ? என மணித்துளிகள் மணியின் கண்களில் பின்னோக்கி நகர்ந்தன.

அது ஒரு வெயில் சுட்டெரித்த சித்திரை மாதம், மதன் தன் மூன்றாண்டு ஹாஸ்டல் வாழ்க்கையை துறக்க நண்பன் குடியிருப்புக்குள்ளே வீடு எடுத்து தங்கிட பேரவா கொண்டு வந்தான். மீதமிருக்கும் ஓராண்டையும் கழிக்க வந்தவனுக்கு ஹாஸ்டல் வாழ்க்கையை விட இந்த குடியிருப்பு வாழ்க்கை மிகவும் பிடித்து போனது. பின்பு பிடிக்காத என்ன? பரோலில் வெளிவந்த கைதி போல கூட்டை விட்டு வெளி வந்த குருவி போல அத்தனை மகிழ்ச்சி அவன் உள்ளம் முழுவதும்.

மணி தன்னை புஜபல பராக்கிரமசாலியாக எண்ணி கொண்டு வட்டாரத்தில் ஒரு டானை போல சுற்றி திரியும் இளைஞன். மதனின் கல்லூரியில் தான் அவனும் படிக்கிறான்.
மணி மதனின் மீதுள்ள அன்பினால் தாம் இருக்கும் குடியிருப்பிலே வசிக்க அழைத்தான். இவனும் மூச்சை காட்டாமல் வந்து குடியேறினான்.

இவர்களுடன் மூன்றாவதாக இணைந்தான் மகிழ்நன். அதே குடியிருப்பில் வசிக்கும் போக்கிரி இளைஞன். அனுதினமும் ஏகத்துக்கும் மற்றவர்களை கலாட்டா செய்து மகிழும் நன் அவன். விவசாய கல்லூரியில் களையெடுக்க பயிலும் மாணவன், மணியின் பள்ளிக் கால உற்ற நண்பன்.

ஆண்களுக்குள் எப்போதும் ஒரு கூற்று மிக பிரசித்தம் ” அது நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்” என்பது தான். இருவர் மூவர் ஆனார்கள். மும்மூர்த்திகள் போல மூவரின் அல்சாட்டியம் கட்டுக்கடங்காமல் போனது. கவட்டை கொண்டு சொட்டைகளை பதம் பார்ப்பது. இரும்பு தும்பிகளை கண்டபோதல்லாம் இரும்பு கடைக்கு வழியனுப்புவது, மட்டை பந்துகளால் குடியிருப்பு ஜன்னல்களில் அழகு சேர்ப்பது என எல்லையில்லாமல் போனது.

அந்த நேரத்தில் தான் அவள் வந்தாள் கரிசல் காடுகளில் பெய்த பேய் மழையை போல வேளுடன் சேர்ந்து மண்வாசனையை பிறபித்தாள்.
அவளை கண்டு மூவரும் சொக்கி தான் போனார்கள். மீனாட்சியை கண்ட நாதன் சொக்கி சொக்கன் ஆன கதை தான் நிகழ்ந்தது அதில் மிகவும் சொக்கி தவித்தது மதன் தான். அது பெயரினால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம். பிரம்மகலையை கண்ட கண்கள் பல பிரம்மபிரயத்தனத்தை முடித்து கொண்டதை போல அவளை தன் பார்வையின்
வீச்சில் ஒளி கூட அண்டாது பார்த்தன.

நாட்கள் சென்றன, மதன் கலையிடம் பேச
சந்தர்ப்பம் ஏதேனும் அமையுமா என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அன்று இரவு குடியிருப்புகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். அங்கு ஆண்களையும் பெண்களையும் கட்டாயப்படுத்தி பல போட்டிகள் நடந்து கொண்டிருந்தன கலைக்கு அந்த கலைகள் வெகுவாக அழுத்து போனது. மெல்ல அவ்விடம் வீட்டிற்கு செல்ல எண்ணினாள். கொண்டாட்டத்தை இரசித்து கொண்டிருந்த தாயிடம் வீட்டுச் சாவியை வாங்கி கொண்டு நகர்ந்தாள்.

வீட்டை திறக்க முற்படும் போது வெளியே எறிந்த மின் விளக்கு அனைந்தது. கொஞ்சம் பதறிப்போனாள். சட்டென ஓர் வெளிச்சம்
சீரிய முகத்துடன் இப்போது அதிர்ந்து போனாள்.

“பயப்படாதீங்க ! நீங்க வீட்ட துறங்க” என்றான் மெல்லிய குரலில்.

மதனை பார்த்து வெளவெளத்து போனவள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை கண்கள் துலாவியது கை விரல்கள் பரபரத்தது நிற்க கண்கள் பரபரக்க விரல்கள் துலாவ அவள் பரபரப்பு என்னுள்ளும் தொற்றிக்கொண்டது.

“மெதுவாங்க மெதுவா! அவசர படாதீங்க…”

“சாரிங்க நேத்து உங்கள தப்பா நினச்சு பயந்துடடேன்”

“பரவால்லங்க இதலாம் பொதுவா வர்றது தானங்க நாய் பேய்லா பார்த்த வர்ற மாதிரி”

“என்னங்க ஆண்கள நாய்னு சொல்றீங்களா!”

“ஆமாங்க பெண்கள் ஆண்கள அப்படி நினச்சே பழகிடாங்க…
சில ஆண்களும் அதுவாவே ஆகி பழகிடாங்க”

“நீங்க எதுவாவும் ஆகலயா?”

“நீங்க எதுவாவும் ஆக்கம இருந்தாலே போதும்…
ஐ மீன் பெண்கள சொன்னேன்” என்று மதன் சொல்லும் போது கலை ஏகத்துக்கும் முறைத்தாள். இருந்தும் மதன் தொடர்ந்தான்

“என்ன பார்த்தாலே தப்பா நினச்சு பயப்புடுவீங்கனு எனக்கு தெரியும்”

“எப்படி தெரியும்”

“எப்பயும் கழுத்துல இருக்குற துப்பட்டா என்ன பார்த்ததும் இருக்க வேண்டிய இடத்துக்கு வரும்போதே தெரியும்”

அதற்கு கொஞ்சம் திக்கிக் கொண்டே தான் பதில் கூறினாள்.

“ஹான் !! அது யுசுவலா கேர்ள்ஸ் செய்றது…
நாங்க…. ஐ மீன் நான் எதுவும் மீன் பண்ணி பண்ணல”

“பாய்ஸ் ஆர் சோ மீன்ல…

ம்ம்

பட் திஸ் இஸ் அன்யுசுவல் ஃபார் மீ…

ஒரு ஆம்பள கண்ண பார்த்து பேசுறானு தெரிஞ்சபுறமும் இட்ஸ் ஹாப்பனிங் னா 

லெட் இட் பி

எனிவே அம் மதன் நீங்க!” என்று மதன் சொல்ல கண் இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கலை.

“ஹோ…

என் கலை.. பிரம்மகலை”

“செம பேருங்க”

“பிரம்மன் செய்த கலை அது தானே மீனிங்”

“ம்ம் அப்படித்தான் அப்பா சொல்வாரு”

“உங்க அப்பா கவிஞரா? இல்ல ஓவியரா?”

“இரண்டுமே இல்லை, ஏன் கேக்குறீங்க”

“கவித மாறி பேரு பெயிண்டிங் மாறி பொன்னு”

“எனக்கு ஏற்கனவே ஜலதோஷம்ங்க”

“ஐஸ் வைக்கிறேனு கலாய்கிறீங்க….”

என்று ஒரு புன் முறுவலை மட்டும் அவ்விடம் விட்டு சென்றான். அந்த முன் முறுவல் அவளை ஏகத்துக்கும் வதைத்தது நினைவிலும் நித்திரையிலும் அவனை அப்படி அந்த கள்ளச்சிரிப்பில் எதை கவர்ந்து சென்றானோ இல்லையோ அவள் உள்ளத்தை களவாடி அவன் புன்னகையை விதைத்து சென்றான். காதல் மெல்ல துளிர் விட தொடங்கியது. அது மாபெரும் விருட்சமாக வளர்ந்து நின்றது.

மனதுக்குள் காதல் ரீங்காரமாக வட்டமிட்டு தேனை அள்ளி தெளித்து கொண்டே இருந்தது. முதல் காதல் எப்போதும் மனதிற்கு நெருக்கமாகி ஓர் சுகானுபவத்தை விட்டு செல்லும் அந்த அனுபவம் நம்மை காலம் கடந்து இட்டு செல்லும். காதலின் அழகே கொடுப்பதும் பெறுவதும். அள்ள அள்ள குறையாத வண்ணம் இருவரும் பரஸ்பரம் கொடுத்து பெற்று கொண்டார்கள். இவர்களின் அன்பை கண்டு காதலுக்கே மூச்சையுற்றது.
காதலால் காதல் கொண்டு காதலாகி
காதலாட காதலில் திளைத்திருந்தார்கள். காதலர்கள் தவறு செய்வதுண்டு காதல்கள் தவறு புரிவதில்லை. அவனும் தன் காதலில் உன்மையை விதைத்திட முயற்ச்சித்தான் ஆனால் பொய்மை தலை தூக்கியது. அது தன்னையே அறியாமல் நிகழ்ந்தது. சில சமயங்களில் பொய்மை காதலில் துளிர் விடும் அது சரச நாடகங்களுக்காக இருக்கலாம். காமனின் பானம் போல அடிக்கரும்பாய் காதல் இனித்தது. அந்த கரும்பில் இருந்து எய்யப்படுவது ஓர் துரோகம் என அவள் அறியாமல் இருந்தாள்.

துரோகம் யாரை தான் விட்டு வைத்தது. தூரோகங்கள் பல வகை உண்டு ஆனால் அதில் கொடியது நம்பிக்கை துரோகம் தான். நம்பி கெடுவதென்பது வாழும் போதே நரகத்தை காணும் தருணம். அப்படி ஓர் தருணத்தை அவன் பரிசாக வழங்கினான். காதலின் கடவு நிலை திருமணம் அதை நோக்கி நகர்த்த பரஸ்பரம் இருவரும் திட்டமிட்டனர். தன் காதலை தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என்று அவள் தீர்க்கமாக நம்பினாள் ம்ஹும் நம்ப வைக்கப்பட்டாள்.

நாஜி படைகளில் சிக்கிய சிப்பாய் போல தன்னிலை மறந்தாள். ஒருவர் அளவு கடந்த நம்பிக்கையை வழங்கும் போது அது நமக்காக விதிக்கப்பட்ட ஆசிர்வாதமாக எண்ணுகிறோம் இறைவன் தமக்காக வழங்கியது என அதன் மீது ஆதிக்கம் செலுத்த எண்ணுகிறோம். மனிதன் எவ்வளவு பெரிய கொடிய மிருகமாக காட்சியளிக்கிறான் அல்லவா!.

அவன் அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவ்வளவு சிரத்தையுடன் இருந்தாள். அவன் மீது உயிரையே வைத்திருந்தாள் அதனால் தான் தீர்க்கமாக நம்பினாள். அது அவளை படி தாண்டவும் செய்தது. தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என அவள் இந்த காரியத்தை செய்ய துணிந்தாள் அவன் மீதுள்ள காதலும் ஒரு மனதாக செய்ய தூண்டியது. அதனால் தான் அவள் அன்றிரவு அப்படி பேசினாள்.

அவன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் அவளை
நிராகரிக்க ஒரு புது யுக்தியை கையாண்டான். எப்படி அவனுக்கு அந்த யோசனை வந்தது என்று தெரியவில்லை. அவன் படித்த புத்தகங்களின் நீட்சியாக இருக்கலாம் அவன் திரைப்படங்களின் பாதிப்புகளாக இருக்கலாம். எதுவானாலும் அவன் மிகப்பெரிய தவறு இழைக்க துணிந்தான். தன் நண்பன் மணியின் துணையுடன் அன்று இரவு தன் நாடகத்தை நடித்து முடித்தான். நாடகத்தை முடித்த கையோடு இரவோடு இரவாக ஊர் விட்டு ஊர் வந்தான். நாடோடியை போல மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தான். மணியுடன் மட்டும் அவ்வப்போது உலாவும் உரையுமாய் இருந்தான். ஆனால் நாம் செய்த கர்மா நம்மை விடாது அல்லவா! அது, அவனை மகிழ்நன் மூலம் துரத்தியது அது அவனுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுத்தர ஆவலாய் இருந்தது.

மார்கழியில் திங்கள் இரவு பாவை நோன்பு நோற்கும் பெண்கள் விழித்தெழும் நல்வேளை அது. இரவு பணியை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான் மதன். நிலவொளியின் வெளிச்சத்தில் ஆந்தையின் அலறலும் பேடை குயில் கூவலும் இரவை நிசப்தமற்றாக்கியது. அந்த இனிய கீதத்தில் கண் உறங்க எத்தனித்தான். மணி ஐந்தை நெருங்கியது. மதனின் அலைப்பேசி அலறியது நான்கு முறை இசைத்தது. தூக்கம் கலையவில்லை மதனுக்கு, மீண்டும் ஒலித்தது இந்த முறை லேசாக கண் விழித்தான். மெதுவாக எழுந்து கைப்பேசியை எடுக்க முற்பட்டான் ஆனால் ஒலி அடங்கியது. திடிரென எங்கிருந்தோ அலாரம் சத்தம் மதன் காதை கவ்வியது, எழுந்து மின் விளக்கை போட முயற்சி செய்தான் ஆனால் பலனில்லை. சட்டென மின் விசிறியின் வேகம் கூடியது விளக்குகள் பளிரென வெட்டியது. சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு தலை கிடுகிடுவென சுற்றியது. அவன் விழிகள் பிதுங்கின தலையில் கைவைத்து அப்படியே விழுந்தான். இது எந்த இடமென்றும் தான் எங்கே இருக்கிறோம் என்றும் அவன் மனதுக்குள்ளே ஆயிரம் குழப்பங்கள். கேள்விகள் என்னவோ இரண்டு தான் ஆனால் அதற்கான பதில்கள் ஆயிரமாயிரம். கொஞ்சம் கதறினான் இதமாக கத்தினான் அழுதான் புரண்டான் நான்கு சுவற்றை இணைத்த கதவை தட்டினான். ம்ஹூம் யாரும் அங்கு இல்லை உதவிக்கு, ஜன்னல்கள் இல்லா நான்கு சுவற்றுக்குள் கடிகார முட்களும் தொட்டியில் நீந்திடும் மீன்களுமே துணையாகி கிடந்தன.

தரையில் கிடைத்தப்பட்டிருந்த கைப்பேசியை எடுத்து உதவிக்கு யாரேனும் அழைக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் அங்கும் அதிர்ச்சி அவன் கைப்பேசியில் சேமிக்கப்பட்ட எந்த கைப்பேசி எண்ணும் இல்லை. கடைசியாக வந்த மிஸ்டு கால் மட்டுமே இருந்தது.

செல்போனினால் செல்லரித்துப்போன மூளையில் ஞாபகம் வேறு மறந்து போயிற்று.

அந்த எண்ணுக்கு போன் செய்தான் நீண்ட அழைப்புக்கு பிறகு ஏற்கப்பட்டது இவன் குரலில் நிசப்தம் நிலவி எதிர் குரலில் ஓர் பெண் குரல்.

“ஹலோ!

ஹலோ !

யாரு போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க”

“ஹலோ ஹலோ நீங்க யாரு?” என் பதறி அடித்து கேட்டான்.

“நீங்க தான் போன் பண்ணீங்க…

இப்ப என்ன யாருனு கேக்குறீங்க…

நீங்க யாரு சார்?

உங்களுக்கு என்ன வேனும்”

“நான் இங்க…

என்ன யாரோ கடத்திட்டாங்க..

என்ன காப்பாத்துங்க”

“கடத்தீட்டாங்களா!!

ஹே யாரோ கலாய்கிறீங்க

யாரது??”

“இல்லங்க நான் உன்மைய தான் சொல்றேன்”

“ஹே சும்மா மொக்க போடாம தூங்கு

கடத்திட்டாங்களாம்.. கடத்திட்டாங்க

காமெடி பண்ணிட்டு

போன் வை” அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் இதயம் கலவரமானது.

மனதில் தோன்றிய சில எண்களை முயற்ச்சித்தான். முயற்சி தோல்வியுற்றது. சிறிய தாமதத்திற்கு பிறகு அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

“ஏங்க என்ன நம்புங்க…

என்ன யாரோ கடத்திட்டாங்க

ஹெல்ப் பண்ணுங்க”

“உனக்கு எத்தன தடவ சொல்றது

லூசா நீ!!

சும்மா டிஸ்டர்ப் பண்ணாம போன வை ”

“இருங்க ப்ளிஸ்!!

என்னங்க நம்ப மாட்றீங்க

உங்கள கெஞ்சி கேக்குறேன் ஹெல்ப் பண்ணுங்க”

“சரி இரு…

நான் போலிஸ்ட சொல்லி உன்ன காப்பாத்த சொல்றேன்…”

“இல்ல வேணாம் வேணாம்…

ஏய் எனக்கு இப்ப தான் புரியுது..

நீ தான என்ன கடத்துனது…

சொல்லு நீ தான??”

ஒரு நீண்ட நிசப்தம். அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தாள். சட்டென வெடித்து சிரித்தாள்.

“ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…”

என சிரிப்பு சத்தம் விண்ணை முட்டியது.

“ஏய் நீ கலை தான??

சொல்லு சொல்லு…”

சிரிபலை தொடர்ந்து கொண்டே இருந்தது..

“போடா ஆஆஆ” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே ஒலித்தது…

கையில் இருந்த சாவியை மகிழ்நன்னிடம் கொடுத்தபடி அவ்விடம் நவில்ந்தாள். கண்களில் நீர் கசிய மென் சிரிப்புடன். ஆனால் மதனின் காதுகளில் மட்டும் ஒலித்து கொண்டிருந்தது அந்த ஒற்றை வார்த்தை “போடா ஆஆஆ”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

கர்ம வினை

​ஒரு சமயம் ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சிதிரகுப்தனுக்க

ு குழப்பமாகி விட்டது. யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது?

*கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா ?*

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.

சரி தன் எஜமான்னான எமதர்மனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். இதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், காலம் வருமவரை பொறுமையாக இருக்கவும் அறிவுறித்தினான்.

ஒரு நாள்…சில அந்தணர்கள் உதவி நாடி அந்த அரசனைக் காணச் சென்றார்கள். அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் “ ஒரு விஷயம்..சற்று எச்சரிக்கையாக இருங்கள்..இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்” என்று கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்த்த் பெண்மணிக்கே என முடிவு செய்தான்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும்.பழி சொன்னதற்காக. நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்து சேரும்.

எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.